129
“இடமில்லையென்றால் இன்னொரு வண்டி பிடித்துக் கொள்கிறோம்” என்றாள் சகுந்தலா.
“சரி இப்போதே சாயபுவைக் கூப்பிட்டுச் சொல்லிவைத்து விடு! அவன் போய்விடப் போகிறான்” என்று கூறிக்கொண்டே எழுந்து உள்ளே போனார் சர்மா.
15
மறுநாள் மணி பதினொன்று இருக்கும். சர்மாவின் வீட்டு வாசலில் வந்து நின்ற குதிரை வண்டியில் இருந்து முதலில் காமுவும் சுந்தரும் இறங்கி வந்தார்கள். பின்னொடு சகுந்தலா, காமுவின் அம்மா, காமுவின் அப்பா மூவரும் இறங்கிவந்தார்கள் இன்னொரு வண்டியிலிருந்து மூட்டை முடிச்சுகளும், பெட்டி படுக்கைகளும் இறக்கப்பட்டன.
பார்வதி அம்மாள் தயாராக வைத்திருந்த ஆரத்தியைக் காமுவுக்கும் சுந்தருக்கும் சுற்றிக் கொட்ட எல்லோரும் உள்ளே சென்றார்கள்.
“எல்லாம் நல்லபடி சேமமாக வந்து சேர்ந்தீர்கள். ரொம்ப சந்தோஷம் சகுந்தலா. இவர்களெலாம் ரயிலில் எப்போது சாப்பிட்டதோ, என்னவோ? முதலில் காமுவுக்கு ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடு போ” என்றார் சர்மா.
“காமு உங்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டுமாம். கொஞ்சம் இப்படி வந்து நிற்கிறீங்களா, தாத்தா!” என்றாள் சகுந்தலா.
“மாமனாருக்கு முதலில் செய்யச் சொல்...கங்காதரய்யர், இப்படி வாங்களேன்” என்றார் சர்மா.
சர்மா, மாமனார் இருவருக்கும் நமஸ்கரித்து எழுந்தாள் காமு.