59
விஷயம்'என்று சர்மா இங்கு வந்திருந்தபோது சூசகமாகச் சொன்னார்.
எங்களுக்கும் உன்னைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவசியம் புறப்பட்டு வரவும்.
இப்படிக்கு,
கங்காதரய்யர்.
அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான் சுந்தரம். கடற்கரை பக்கமாகவே நடந்தான். உள்ளச் சுமை அவனை அழுத்தியது; உடல் கனத்தது: உலகம் சூனியமாய்க் காட்சி அளித்தது. எதிரே வந்த உருவங்கள் நீரில்,கரைந்த சித்திரமெனத் தெளிவின்றிக் காட்சி அளித்தன.
ஈர மணலில் கொஞ்ச தூரம் நடந்து போய் அலைகளுக்கருகே உட்கார்ந்து கொண்டான். உள்ளச் சுமை உடலைக் கனக்கவைத்ததால், கால் சுவடுகள் மணலில் ஆழமாகப் பதிந்தன.
மனம் எதிலும் லயிக்கவில்லை; அவன் கைவிரல் ஈர மணலில் மூன்று பெயர்களை எழுதியது.
சாம்பசிவம், சகுந்தலா, சுந்தரம்-திடுமெனச் சீறி வந்த அலை ஒன்று சாம்பசிவம் என்ற எழுத்தை அழித்துவிட்டுப் போய்விட்டது. 'இயற்கைக்கே பொறுக்கவில்லை இது' என்று கூறியது அவன் உள்ளம்; அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தான்.
சகுந்தலா-சாம்பசிவம் திருமணம் இனிதே நடந்தேறியது. விடியற்காலையில் இருந்தே 'கும்'மென்று காதை நிரப்பிக்கொண்டிருந்த மேள வாத்திய இசை ஓய்ந்து கலியாண வீட்டில் ஒருவித கலகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டன. முதல் பந்திக்கு வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. புதுமணத் தம்பதியர் பூ மாலை.