75
தமிளனின் புகள் நாடெங்கும் பரவணும். அவங்க பெருமையை மக்கள் உணரனும்...உங்களுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, மாசச் சம்பளமாகவே கொடுத்துடறேன். நாளையிலேருந்து நீங்க நம்ம ஆபீசிலேயே வேலை செய்யலாம்."
"எவ்வளவு கொடுப்பிங்க?"
"நூறு ரூபாய் போதுமா?"
"இப்போதைக்குப் போதும். இரண்டு மாசத்துக்கெல்லாம் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வரலாம்னு இருக்கேன். அப்போ எனக்கு மொத்தமா முன்னூறு ரூபா வேணும்.”
"அவ்வளவுதானே? எக்சிபிஷன் முடியட்டும் முன்னூறு என்ன ஐந்நூறு தரேன்...இப்போ நாளைக்கே நூறு ரூபா அட்வான்ஸ் தரேன். புத்தர் படத்தை மட்டும் முதல்லே எளுதிடுங்க. அது கொஞ்சம் அவசரம்!" என்றான் சோமு.
சுந்தர் சிரித்தான்.
"என்ன சிரிக்கிறீங்க?"
"இல்லே, திடீர்னு சித்திரக் கலையிலே இப்படி ஒரு அக்கறை வந்துட்டுதே உங்களுக்கு. அதை நினைச்சு சிரிச்சேன்!"
"இப்படித்தான் ரொம்பப் பேர் என்னைத் தப்பா நினைக்கிறாங்க. ஒரு மனுசன் கலையிலே ஆர்வம் காட்டறதிலே என்னய்யா தப்பு?"
"தப்பு ஒண்ணும் இல்லே; சோழியன் குடுமி சும்மா ஆடாதே!”
"நான் சோளியனுமில்லே, எனக்குக் குடுமியும் இல்லே!"
வேகமாக போய்க்கொண்டிருந்த கார் ஒரு டீக்கடையின் முன்னல் போய் நின்றது.
சுந்தரத்துக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.
"டீ சாப்பிடுறீங்களா?"