பக்கம்:வாடா மல்லி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாவது பதிப்பு முன்னுரை

மானுடத்தின் மூன்றாவது பரிமாணமான அலிகளைப் பற்றிய இந்த வாடாமல்லி நாவல் இரண்டாவது பதிப்பாக வாசகத் தோழர்களை நோக்கி வலம் வருகிறது. எழுத்தாளன் என்ற முறையில் எனக்குப் பெரும் அளவிற்கும், அலித்தோழர்களுக்கு சிறிய அளவில் கிடைத்தும் உள்ள ஒரு நல்ல செய்தியின் பின்னணியில் இந்த இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அமரர் ஆதித்தனாரின் ஐம்பதினாயிரம் ரூபாய் இலக்கிய விருது, இந்த நாவலுக்குக் கிடைத்தது. டாக்டர் ஒளவை நடராசன் டாக்டர் பொற்கோ, ராணி ஆசிரியர் மாரிசாமி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தது. சென்னையில் ராணி - சீதை அரங்கில் இந்த விருதை முதல்வர் கலைஞர் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். எனக்கு அன்றுமுதல் இன்றுவரை தம்பிரான் தோழராக விளங்கும் திருமிகு சிவந்தி ஆதித்தன் அவர்கள் இந்த விழாவில் என்னைப்பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்டபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். அதேசமயம் இந்த நாவலை உடனடியாய் வெளியிட்டு எனது பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட வானதி பதிப்பக உரிமையாளர் பெரியவர் திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி சொல்லாத குற்றத்தையும் செய்துவிட்டேன். என்றாலும் இவர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பெருந்தகை. ஆனாலும் இன்றும் என் மனம் கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/13&oldid=1248939" இலிருந்து மீள்விக்கப்பட்டது