வாடா மல்லி ♦113
‘அவர் அப்படி பூவை வைத்திருப்பார் என்று ஒரு சமாதானம். யாரையோ அக்கம் பக்கம் ஆளைப் பார்த்து விட்டு, இவர் அதைச் சொல்லி தன்னைக் கலவரப் படுத்தாமல் பூவை, திருப்பிக் கொடுக்க நேரமாகும் என்று, அப்படியே போயிருக்க வேண்டும் என்ற சுயவிருப்ப சிந்தனை. ஆசைக்கு இலக்காக இருந்தவன் படிப்பை முறித்து வந்ததில் ஒரு துக்கம். அதுவும் ஒரு பெண் விஷயம் என்பதால், படு துக்கம். இவளும் ஒரு வகையில் துஷ்டி கேட்கவும் வந்திருக்கிறாள் என்று சொல்லலாம். ஆனாலும், அவனைப் பார்த்த உடனே, அதுவும், அவன் அவ்வளவு பேசியபிறகு, துக்கமே, சுகமாக மாறியது. ஆனாலும் மீண்டும் வீறாப்பாய்க் கேட்பதுபோல் கேட்டாள்.
“அண்ணி இல்லியா?”
“என்னடி இது. ஒன் வீட்டுக்குத்தானே வந்திருக்காள்.”
“சின்ன அண்ணியைக் கேட்டேன்!”
“உனக்கு அவள் மூத்தவள்தானே.”
“தெரியாதா... நான் சின்னவள்.”
“ஆமாமா. நீ அம்மணமா திரிஞ்சபோது, அவள் ஜட்டி போட்டிருந்தாள். இப்போகூட ஞாபகம் வருது:”
மலர்க்கொடிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வெளியேறப் போனவளை சுயம்பு அவள் கையைப் பிடித் திழுத்து, கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, அவனும் உட்கார்ந்தான். அவள் தலையை ஆச்சரியமாகப் பார்த்தர்ன். முன் நெற்றியில் ஐந்தாறு முடிக்கற்றைகள். நெற்றிக்குப் பாதிவரை தொங்கின. நேர்வகிடு எடுத்தவளின் தலையில், அந்த முடிக்கற்றை வேர்ப்பிடித்த இடத்தில் ஒரு குறுக்கல் வகிடு. அவனுக்கு ஆச்சரியம். இது எப்படி முடியும்.?