10♦ சு. சமுத்திரம்
“அவள் யாருன்னு எனக்குத் தெரியாது. நானாத் தான் உட்கார்ந்தேன்.”
அடித்தவன், மீண்டும் அவனை அடிக்கப் போன போது, அந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தலையைப் பிடித்துத் தனது கக்கத்திற்குள் வைத்துக்கொண்டார். அப்படியும் அவன் ‘நாலு பேரு தப்பாய் நினைப்பாங்கன்னு நானே என் ஸிஸ்டர் பக்கத்தில உட்காரலே. இந்தப் பயல் என்னடான்னா. அநியாயம் செய்தவனை விட்டுவிட்டு. என்னை மடக்குறது என்ன நியாயம் ?’ என்று இயலாமையில் கத்தினான். அந்த அம்மா வேறு, புருஷன் பக்கத்தில் கோபத்தோடு வந்து, சட்டைக் காலரைப் பிடித்தாள். இதற்குள் அந்த நடுத்தரம் அடித்தவன் மீது போட்டிருந்த பிடியை விட்டுவிட்டு, அவன் முதுகை பொறு பொறு என்பதுபோல் தட்டிவிட்டு, அடிபட்டவனை கூர்மையாகப் பார்த்தார். மனைவியின் கையை மடக்கி, ஒரு கையில் வைத்துக்கொண்டே அவனை சட்டைக்காலரைப் பிடித்து கழுத்தோடு சேர்த்து இழுத்தார். உடனே ஒரு பயணி இப்போதுதான் வீரம் பிடர் பிடித்து உந்த இவன விடப்படாது’ என்று இருந்த இடத்தில் இருந்தபடியே கத்தினார். அது காதில் விழாதது போல், கத்தியவரைப் பொருட்படுத்தாமல், தன்னை மொய்த்த மனைவியை மீண்டும் தள்ளிவிட்டபடியே, கைக்குள் அடக்கமாய் பிடி பட்டவனை மேலும் கீழுமாய் உலுக்கிவிட்டு புலன் விசாரணை செய்தார்.
“நீ யாருடா. ஏய் சொல்றியா இல்ல.”
அவன், அவர் மார்பில் விழப்போனான். அவர் சிறிது விலகிக்கொண்டே அதட்டினார்.
“நீ யாருடா?”
“தெரியலே. எனக்கே தெரியலே..."