பக்கம்:வாழும் வழி.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வாழும் வழி



முந்திரியில் ஒரு பூவின் விருந்தம் மட்டும் ஒரு கனியாக மாறுவதால், அது ‘விருந்த பரிணாமக் கனி’ எனப்படும். அன்னாசியிலும் பலாவிலும் பல பூக்கள் சமூகமாகச் சேர்ந்து கனியாக மாறுவதால், அவை ‘பரிணாம சமூகக்கனி’ எனப்படும். ஆனால் அத்தியிலும், ஆலிலும், விருந்தமும் கனியாக மாறுவதோடு, பல பூக்களும் சமூகமாகச் சேர்ந்து மாறுவதால் - அதாவது, முந்திரியின் தன்மை, அன்னாசி பலாவின்தன்மை ஆகிய இரண்டு தன்மைகளும் அமையப் பெற்றிருப்பதால், அத்திக் கனிகளையும் ஆலங்கனிகளையும் விருந்த பரிணாம சமூகக் கனிகன் என்றழைப்பர். தமிழில் இவற்றைக் ‘காம்பு மாறிய கலப்புக் குழுக் கனிகள்’ என்றழைக்கலாம்.

எனவே, அத்திப்பூக்கள் உண்டென்றும், அவை ஒருவகைக் கிண்ணத்துக்குள்ளே அடக்கி மூடி மறைக்கப்பட்டு, உள்ளேயே பூத்து மகரந்தச் சேர்க்கை பெற்றுக் கனியாகின்றன என்றும் அறியலாம். ஆலங்கனியும் இது போன்றதே யாதலின், ‘அத்தி பூத்தாற்போல’ என்று சொல்வதைப் போல, “ஆல் பூத்தாற்போல” என்றும் பழமொழி சொல்லலாம் போலும். ஆனால் ஆலங் கனிகளைப் பறவைகளே புசிப்பதால், மக்கள் அதன் பேச்சுக்குப் போகாமல், தாம் உண்ணும் அத்தியோடு பழமொழியை நிறுத்திக்கொண்டார்கள் போலும்! அத்தி பூப்பது மக்கள் கண்ணுக்குத் தெரியாததனால்தான், வராத ஒருவர் வந்துவிடின், ‘அத்தி பூத்தாற்போல இருக்கிறதே!’ என்று வியக்கின்றனர் போலும்.

ஆம்! ‘அத்தி பூத்தாற் போல’ என்ற பழமொழியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பொதுவாகப் பூ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/132&oldid=1111841" இலிருந்து மீள்விக்கப்பட்டது