பக்கம்:வாழும் வழி.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வாழும் வழி



இந்தக் கருத்துக்களையெல்லாம் நான் இளமையில் அப்படியே நம்பியிருந்தேன். இளமையில் பத்து வயது தொட்டே எனக்கு திருவாசகத்தில் பயிற்சி உண்டு. பல பகுதிகள் தண்ணீர்பட்ட பாட்டில் மனப்பாடம் உண்டு. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், திருவாசகம் ஒப்பித்தல் போட்டியில் பரிசும் பெற்றிருந்தேன். ஆனால் அப்போது முழுப்பொருளும் தெரியாது. பிறகு பிறகே பொருள் புலப்பட்டது. பின்னர் சில்லாண்டுகள் திருவாசகத்தை அறவே மறந்து விட்டிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு - 1951 என எண்ணுகிறேன் - மயிலம் தமிழ்க் கல்லூரியிலிருந்து என்னைச் சொற்பொழிவிற்கு அழைத்தார்கள். ‘திருவாசகம்’ பற்றிப் பேசவேண்டும் என மயிலம் அடிகளார் அவர்களே தலைப்பும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தார்கள். நானும் ஒத்துக்கொண்டேன்.

சில்லாண்டு இடைவெளிக்குப்பின்னர், புதிதாகத் திருவாசகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். அதாவது, புதுத் தெளிவுடனும் புத்துணர்ச்சியுடனும் நூலின் முகப்புப் பகுதியைப் படித்துக்கொண்டு வந்தேன். அப்போது, நான் இதுவரையும் கேள்விப் படாத ஒரு புதுக் கருத்து என் உள்ளத்தே தோன்றியது. திருவாசகத்தின் இயற்பெயர் வேறொன்று என்பதுதான் அந்தப் புதுக் கருத்து. இதனை இதுவரையும் யாரும் கண்டுபிடித்துக் கூறியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

திருவாசகத்திலுள்ள ஐம்பத்தொரு பகுதிகளுள் முதற்பகுதியாக அமைந்திருப்பது ‘சிவபுராணம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/68&oldid=1107074" இலிருந்து மீள்விக்கப்பட்டது