பக்கம்:வாழும் வழி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

77



மறுப்புக்கு மறுப்பு:- இச்செய்யுள் மாணிக்கவாசகர் எழுதியதன்று என்பதை வாதவூர் எங்கோன் எனப் படர்க்கையில் கூறியிருப்பதிலிருந்தே உணரலாம். பிற்காலத்தவர் ஒருவர், நூலின் பெருமைகூறு முகத்தான் இப்பாடலைப் புனைந்து சேர்த்துள்ளார். அல்லது, தலைப்புகளுக்கு விளக்கம் எழுதியவரின் கை வேலையாகவும் இஃது இருக்கலாம். எங்கள் ஓலைச் சுவடியிலோ, நூற் சிறப்பாக, இச்செய்யுளோடு இன்னும் இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் பிற்சேர்க்கைகளே. முன்பெல்லாம், நூலுக்கு உரை எழுதுபவர், ஓலைச் சுவடியைப் பெயர்த்து வேறு படி எடுப்பவர், அச்சேற்றுபவர் முதலியோரெல்லாம் நூலின் சிறப்பைப் பற்றிச் சில பாடல்கள் பாடி நூலுக்கு முன்னால் சேர்ப்பது வழக்கம் என்பதைப் பழஞ்சுவடி யாராய்ச்சியாளர் உணர்வர்.

எனவே, மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப்பட்டு, திருவாசகம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூலுக்கு, ஆசிரியரால் இடப்பட்ட இயற்பெயர் ‘சிவபுராணம்’ என்பதாகும் என்பது இனிது விளங்கும். வாதவூரர் என்னும் இயற்பெயர் மாற, மாணிக்கவாசகர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் ஆசிரியர் இயற்றிய சிவபுராணமும் திருவாசகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றதில் வியப்பொன்றும் இல்லையே! மேலும், ஒருவர் தாம் எழுதிய வாசகத்திற்குத் தாமே திருவாசகம் என்னும் சிறப்புப் பெயர் சூட்டியிருக்க முடியாதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/79&oldid=1107328" இலிருந்து மீள்விக்கப்பட்டது