பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 29 நான் எட்டாவது வகுப்பு படித்து வந்த நாளிலிருந்தே எனக்கும் இந் நாவல்களை வாசிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன்களின் நண்பர்கள் பெரியவர்கள், என் பெரிய அண்ணா கல்யாணசுந்தரம் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். உயர்நிலை வகுப்பு மாணவர்கள் சிலர்-நாங்கள் வசித்த தெருவிலும், பக்கத்துத் தெருக்களிலும் இருந்தவர்கள்.-அண்ணாவின் நண்பர்கள். அவர்கள் உற்சாகமானவர்கள். உல்லாசமாய்ப் பொழுது போக்குவதில் ஆர்வம் உடையவர்கள். சீட்டாடுவது வம்புப் பேச்சு பேசுவது போன்ற பொழுது போக்குகளுடன் நாவல்கள் படிப்பதிலும் அவர்கள் நாட்டம் கொண்டிருந்தார்கள். முனிசிபல் ஆபீசில் வேலை பார்த்த ஒருவரும் அந்நண்பர் குழாமில் இருந்தார். பாளையங்கோட்டை முனிசிபல் ஆபீஸ் லைபிரரியில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவர் அங்கிருந்து நாவல்களை எடுத்து வந்தார். அதிகப் புத்தகங்கள் படிக்க வேண்டும், சீக்கிரமாக ஒவ்வொரு நாவலையும் முடித்துவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால் ராத்திரி நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும், அவர்கள் கூடியிருந்து நாவல் படிப்பார்கள். சீக்கிரம் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக, ஒருவர் உட்கார்ந்து நாவலை உரக்கப் படிப்பார். மற்றவர்கள் சுவரில் சாய்ந்து கொண்டும், படுத்தவாறும் நாவலைக் கேட்டு ரசிப்பார்கள். சற்று நேரம் சென்றதும், இன்னொருவர் வாசிப்பார். இப்படி முறை வைத்துப் படித்தும் புத்தகத்தை முடித்து விடுவார்கள். நானும் அவர்கள் படித்தபோது கேட்டு ரசிக்க முடிந்தது. அவர்கள் படிக்காத பொழுதுகளில் புத்தகம் சும்மா கிடக்கும். அதை எடுத்துப் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நாவல் படிக்கிற விஷயத்தில் சுவாரசியமான சங்கதி ஒன்றும் உண்டு. இரவு நேரங்களில் படிக்க விளக்கு வேண்டும். அதற்கு அதிகப்படி மண்ணெண்ணெய் தேவைப்படுமே. அதனால் குற்றாலம் என்கிற மாணவர் ஒரு வழி கண்டுபிடித்தார். இவர் ஜாலி பிரதர். இவரை மற்றவர்கள் குற்றாலம் பிள்ளை என்று தான் அழைத்தார்கள். அந்நாட்களில் தெருக்களில் முனிசிபல் லாந்தர்கள் விடிய விடிய எரியும் கல் தூண் மீது சதுரமாய்க் கண்ணாடிச் சுவர்கள் கொண்ட கூண்டினுள் விளக்கு இருக்கும். முனிசிபாலிட்டி ஆள் காலையில் வந்து விளக்குகளை எடுத்துப் போவான். ஆபீசில் அவை துடைக்கப்பெற்று, தேவையான அளவு மண்ணெண்ணெய் நிரப்பப்படும். மாலையில் ஒரு ஆள் விளக்குகளைச் கொண்டு வந்து, ஒவ்வொரு கம்பத்தின் மீதுள்ள கூண்டுக்குள் வைத்து விளக்கை ஏற்றிவிட்டுப் போவான்.