பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ל"ל பத்திரிகைக்குப் பல இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் அனுப்பிய கதைகள் படித்துப் பார்க்கப்படாமலே கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றைச் சிறிது சிறிதாகப் படித்து வெளியிடலாம் என்று தோன்றிய கதைகளைத் தனியாக எடுத்து வைத்தேன். அப்போது அகிலன் புதுக்கோட்டையில் இருந்தார். இந்திரா சிறுகதைப் போட்டியில் என் கதை தெருக்கூத்து முதல் பரிசும், அகிலன் எழுதிய கதை இரண்டாவது பரிசும் பெற்றிருந்தன. சினிமா தியேட்டரில், வண்டியில் அமர்ந்து நோட்டீஸ் கொடுப்பதற்காகத் தெருத் தெருவாகச் செல்லும் ஒருவனின் வாழ்க்கை அனுபவம் பற்றியது அவர் எழுதிய கதை. அவர் என்னைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடிச் சென்றார். க. நாராயணன் என்ற எழுத்தாளரும் புதுக்கோட்டையில் வசித்தார். காகித விற்பனைக் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். விஸ் காண்டேகர் பாணியில் வாழ்க்கைத் தோணி எனும் நாவலை எழுதிப் பெயர்பெற்றார். 'தாய் நாடு' என்ற சிற்றிதழையும் சிறிது காலம் நடத்தினார். இவை பின்னர் நிகழ்ந்தவை. 'அணிகலம் பத்திரிகை ஆசிரியர் கதிரேசன் செட்டியாரை ஒருநாள் அவர் வீட்டில் சந்தித்தேன். எனது வளர்ச்சிக்கு உதவிய பத்திரிகைகளில் ಆ ஒன்று. தொ.மு.சி. ரகுநாதன் கதை, கட்டுரைகளையும் வெளியிட்டது. இலக்கிய விமர்சனம்' என்ற கட்டுரையை அவர் முதலில் அணிகலம் மலரில் தான் எழுதினார். பிறகு அதை விரிவாக எழுதி இலக்கிய விமர்சனம் என்ற புத்தகமாக வெளியிட்டார். தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய முதலாவது விமர்சன நூல் அதுவேயாகும். கதிரேசன் செட்டியார் நடுத்தர வயதினர்தான். வெகு எளிமையாகக் காணப்பட்டார். அணிகலம் பத்திரிகையைத் தரமான இலக்கிய இதழாக உருவாக்கிய அவர் அதை ஒரு குடிசைத் தொழிலாகவே நடத்தினார் என்று சொல்லலாம். பத்திரிகை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் அவர் ஒருவராகவே கவனித்துக் கொண்டார். சிக்கனத்தில் கருத்து உடையவர். தபால் கார்டில் எவ்வளவு அதிகம் எழுத முடியுமோ, அவ்வளவு வரிகளை நுணுக்கமாக எழுதுவார். 'எதையும் வீணடிக்கக்கூடாது. சில பேர் போஸ்ட் கார்டில் இரண்டு வரி, மூன்று வரிகள் மட்டும் எழுதுகிறார்கள். கார்டை வீணடிப்பது தப்பு என்று அவர் கூறுவது உண்டு. ஒரு நாள் மாலை வி.ரா.ராஜகோபாலன் புதுக்கோட்டைக்கு வந்தார். இரவில் என்னுடன் தங்கினார். 'திருமகள் நிலைமை பற்றி விசாரித்தார். நான் உள்ள நிலவரங்களைக் கூறினேன்.