பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வாழ்க்கைப் புயல்


கோயிலிலே மரியாதை, தேச சபையிலே இடம், நகர சபையிலே பீடம், சே, என்ன மதி மயங்கிய மக்கள் என்று நினைத்து வருந்தினேன்.

நானும் கடப்பாறையைத் தூக்கியிருந்தால், வேலை அலுப்பிலே இந்த எண்ணங்கள் வராதிருந்திருக்கும்; நான் 'வேலை பார்ப்பவன்.' எனவே, சிந்திக்க வசதி இருந்தது; அந்தச் சிந்தனை தான், என் சித்தத்தைச் சிதைத்து வந்தது.

"டே! தடியா! எவ்வளவு நேரம், அந்த மூட்டையைத் தூக்கிப் போடுவதற்கு; ஆகட்டும் சீக்கிரம், ஆமைபோல நகராதே. அவர் வருகிற வேளை."

"தே, குட்டி! என்ன இது, அன்ன நடை நடக்கிறே; தூக்கு சட்டியை, ஏறு சீக்கிரம், மேலே பார், சுண்ணாம்பு சுண்ணாம்பு என்று அவன் கத்துகிறான்."

"மேஸ்திரி! போதும் சிமிட்டி செட்டியார், அரை மூட்டைக்கு மேலே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். பாழ்பண்ணாதே பொருளை."

மானேஜரல்லவா நான், என் அன்றாட உத்தரவுகள் இவை. முதலிலே சந்தோஷம், கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது, இப்படிப் பல பேர்வழிகளை மிரட்டி வேலை வாங்குவது. நாளாகவாக இந்த வேலை எனக்குக் கசப்பு உண்டாக்கிற்று. இவர்கள் பாபம், இங்கே இப்படி உழைக்கிறார்கள், ஒரு நிமிஷம் சும்மா இருக்கவிடாமல் நான் கொத்துகிறேன் அவர்களை, பாடுபடும் இவர்கள் பெறுகிற கூலி; அவர்களின் வாழ்க்கைக்குப் போதாது என்பது எனக்குத் தெரியும். குடும்பம் குடும்பமாக வேலைக்கு வருகிறார்கள், குழந்தைகளை மரத்தடியில் தூங்கவைக்கிறார்கள், புளித்த கூழைச் சாப்பிடுகிறார்கள், உழைக்கிறார்கள், பொழுது சாயு-