பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வாழ்க்கை நலம்

நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக்கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, தொடக்க காலத்தில் இடர்ப்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.

மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/102&oldid=1133232" இலிருந்து மீள்விக்கப்பட்டது