பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வாழ்க்கை நலம்


ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையன. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தணியரசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வாழ்க்கை.

எந்த ஒரு நன்மைக்கும் களம் தூய்மையாக வேண்டும் அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத்தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி. அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லாரும் வாழ்தல்-நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையன என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். நெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறிச் சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/24&oldid=1133004" இலிருந்து மீள்விக்கப்பட்டது