பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வாழ்க்கை விநோதம்

காரியத்தைச் சொல்லாமல் போகிறாரே என்று நினைத்து ‘என்ன காரியமாக வந்தார்’ எனக் கேட்டேன்.

“ஒன்றுமில்லை. தங்களையும் இந்த ஆபீஸையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம்தான்!” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். சிறிது தூரம் போனதும் திரும்பி வந்து, “மிஸ்டர்....ஒரு விஷயமல்லவா? எனக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு மணியார்டர் வரும். வந்ததும் தந்துவிடுகிறேன்.... ஐந்து ரூபாய் இருந்தால் தயவுசெய்து கொடுங்கள்” என்றார்.

இந்த மாதிரி கடன் வாங்க வருபவர், பேச்சிலே கடன் வாங்க வந்ததை மறந்தது போலவும், விடை பெற்றுச் சென்ற பிறகே அந்த ஞாபகம் வந்தது போலவும், பாவனை செய்து பேசுவது நல்ல சாமர்த்தியமல்லவா? இதுதான் ‘கடன் வாங்கும் கலை’ என நினைக்க வேண்டி யிருக்கிறது.

கையில் பணமில்லை என்று நான் எவ்வளவோ சொல்லியும், அந்த நண்பர் என்னை விட்டபாடில்லை. பெங்களுர் சென்ற நண்பர் தம்மிடம் எவ்வளவு சரசமாயிருந்தார் என்பதையும், எப்படி நாணயமாக ஒருவருக் கொருவர் தாங்கள் இருவரும் நூறு, ஐம்பது கைமாற்று வாங்கிக் கொடுத்துக்கொண்டார்கள் என்பதைப்பற்றி யெல்லாம் அளந்துகொண்டே யிருந்தார். தப்ப வழி யில்லாததால், ஐந்து ரூபாய் இல்லையென்றும், மூன்று ரூபாய் வேண்டுமானால் தரமுடியும் என்றும் அவரிடம் சொன்னேன். கிடைத்த வரையில் சரி என்று, அதை அவர் வாங்கிச் சென்றார். நாலைந்து நாட்களுக்குள் திருப்பித் தருவதாகவே, அவர் மிக்க உறுதியாகச் சொன்னார். வருஷம் இரண்டாகிவிட்டது. பணம் வந்தபாடில்லை.