பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கு வந்தது


வீதியில் மேளச் சத்தம் கேட்டது. நானும் என் நண்பன் நாராயணனும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தோம். சுவாமி ஊர்வலம் வந்ததுதான் அந்தச் சத்தத்துக்குக் காரணம்.

சுவாமி தரிசனம் செய்வதற்குமுன்னால் என் பார்வை மேளக்காரர்கள் மேல் விழுந்தது. அவர்களில் ஒருவர் நெற்றியில் அழகாகப் பட்டை அடித்து, கழுத்தில் சங்கிலியும், இடுப்பில் பட்டும், கையில் தவுலுமாகக் காட்சி அளித்தார். முகம் எங்கேயோ அடிக்கடி பார்த்த மாதிரியாக இருந்தது. ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இதற்குள் நாராயணன், “என்னப்பா, என்ன யோசனை? அந்த ஆளையே எடுத்துவிடுவது போலப் பார்க்கிருயே!” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை, இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரியாக இருக்கிறதே! அதுவும் அடிக்கடி........”

“ஓஹோ, அவர்தான் மிலிடரி ஹெயர்கட்டிங் ஸ்லூன்’ புரோப்ரைட்டர் ஆறுமுகம். தெரிந்ததா?”