பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பிரயாணம் !


நானும் என் நண்பர்களும் சிதம்பரம் செல்வது என்று தீர்மானித்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிட்டு, பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தோம். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் காண்பது என்பதே எங்களது நிகழ்ச்சி முறை.

ஆனால், புறப்படும் தினம் வருவதற்குள் பல துன்பங்கள் வந்துவிட்டன. அப்பொழுது மார்கழி மாதமானதால், ரயில்வேயில் டிக்கெட் தரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். “சிதம்பர தரிசனமா? அப்படியானால் டிக்கெட் கிடையாது” என்று நந்தனுக்கு வேதியர் குறுக்கே நின்றதுபோல, எங்கள் பயணத்துக்கு வேதியனாக நின்றனர். “என்னதான் கஷ்டம் வந்தாலும், சிதம்பரம் போகாமல் இருப்பதில்லை. இந்த ஜென்மத்தை வீனாகக் கழிப்பதில்லை” என்ற திடசித்தத்துடனேயே இருந்தோம்.