பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பிரயாணம்

17


புறப்படும் நாள் வந்தது. என்னை நண்பர்கள் டிக்கெட் வாங்குவதற்கு எதிர்ப்பில்லாமலேயே தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். சீக்கிரமாகவே போய்விட்ட படியால், டிக்கெட்கொடுக்கும் ஜன்னல்பக்கமாகப் போய் நின்றுகொண்டேன். பின்னால் வந்தவர்கள் எல்லாம் என்னுடைய பலத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். டிக்கெட் கொடுத்த பாடாயில்லை. டிக்கெட் கொடுப்ப வரின் தரிசனம் கிட்டாதபடி ஜன்னல் கதவு நந்தியாக மறைத்திருந்தது. அநேகர் சத்தம் போட்டனர். கதவை உடைக்க முயன்றனர். என்ன செய்தாலும் சாவதான மாகத்தான் திறக்கப்பட்டது.

கதவு திறந்ததுதான் தாமதம். ஒருவர்மேல் ஒருவர் விழுந்து ஜன்னலை நோக்கிக் கையை நீட்டினர். ஆனால், எல்லாருடைய பலமும் என்மேல்தான் தாக்கிற்று. இந்தக் கூட்டத்துக்குள் என்னுடைய மிதியடியை அறுத்துவிடுவது என்று ரொம்பப் பேர் முயற்சி செய்தனர்; பலிக்கவில்லை.

சிதம்பரத்துக்கு டிக்கெட் கொடுக்காததால் மாயவரத் துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். வெளியே வருவ தற்குள் எனது குடல் வெளியே வந்துவிடும் போலாயிற்று. ஆனால், நடராஜர் கிருபையால் தப்பினேன்.

என் வெற்றியை எனது நண்பர்கள் மெச்சினர். எல்லோரும் ரயிலை நோக்கிச் சென்றோம். நாங்கள்தாம் முதலில் சென்றுவிட்டோம் என்று எண்ணினோம். ஆனால், அங்கே ஏராளமான கூட்டம் ஏற்கெனவே இருந்தது. சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் குற்றவாளியைத் தேடுவது போல ஒவ்வொரு வண்டிக்குள்ளும் தலையை விட்டுப் பார்த்தும் இடமில்லாது அலைந்துகொண்டிருந்தோம்.