பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணப் பித்து

73

தான்! சாகும்வரை மிகுத்து மிகுத்து வைத்துக் கானும் பலன்தான் என்ன?

இம்மாதிரி லோபிகளாவது, கையில் உள்ள பணத்தைச் செலவழிக்கமால் பூட்டி வைப்பதோடு நிற்கிறார்கள். ஆனால், இந்த லோபித்தனத்தைவிட மிகவும் மோசமாக வேறு ஒன்று இருக்கிறது. அதுதான் பணத்தை மேலும் மேலும் சேர்க்க வேண்டுமென்னும் ஆசை. பணம் கையை விட்டுப் போகாமல் அதைக் காப்பாற்ற ஒரு காரணமிருந்தால், பணத்தைச் சம்பாதிக்க ஒன்பது காரணங்கள் இருக்கின்றன.

டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கில ஆசிரியர் ஓரிடத்தில் “மனிதன் பணத்தைச் சம்பாதிப்பதைவிடக் குற்றமற்ற காரியம் வேறொன்றில்லை” என்கிறார், ஆளுல் சில மனிதர்கள் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால், பயங்கரமாக இருக்கிறது. “நாம் பணம் சேகரிப்பதற்காகவே உலகில் ஜன்மம் எடுத்திருக்கிறோம்” என்று எண்ணிக் கொண்டு, பணம் பணம் என்று பேயாய் அலைகிறார்கள். நல்ல வழியோ கெட்ட வழியோ, அதைப்பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஏழைகளிடமிருந்துகூடக் கொள்ளையடிக்கிறார்கள். செய்கையில் இப்படி இருந்தாலும் வெளியே மிகவும் நல்லவர்கள்போல் நடிக்கிறார்கள். அவர்களுடைய ஆடம்பரமும் வீண் பேச்சுகளுமே அவ்வாறு நடிப்பதற்கு அணிகளாக இருக்கின்றன.

இந்தப் பணப்பேய்களைவிட, அந்த லோபிகளே மேல் என்பது என் அபிப்பிராயம். கருமிகளால், பிறருக்கு உபகாரமில்லாவிட்டாலும் அபகாரமில்லை; இவர்களால் அதுவுமன்றோ விளைகிறது.