பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வேலை"ன்னு சொல்லிவிட்டு, அவன் சொன்னான், "உன் குடும்பமும் இந்தக் கிராமமும் நாசமாகாமே இருக்கவேணும்னா , முத்தம்மா! இந்தச் சிசுவை நீ வளர்க்கக்கூடாது. இது பேய்க்குப் பொறந்தது. அதனாலேதான் இவ்வளவு ஆபத்து. இதை நீ உன் வீட்டிலே வளரச்செய்தே, ஒரே வருஷத்திலே அப்பனை முழுங்கிவிடும்; பிறகு, நீ, உன் மூத்தவன், இப்படி 'காவு' வாங்கிக்கொண்டே இருக்கும். அதனாலே இதை வேறே யாருக்காவது 'தத்து' கொடுத்துவிடு. உன் பிள்ளை என்கிற எண்ணமே கூடாது. நீயும் 'இதுவும்' ஒரே கூரையிலே இருந்தாலே ஆபத்துத்தான். ஒரு ஐந்து நிமிஷத்துக்கு மேலே, நீ இதைப் பார்த்தாக்கூட ஆபத்து ஏற்படும். இது பேய்க்குப் பொறந்தது என்று சொன்னான். மூணாமாசம் என் தங்கச்சி தூக்கிட்டுப்போனா, அதிலே இருந்து அங்கேயே அவன் இருந்துகிட்டான். ஆன தாலேதான் டாக்டரய்யா, நான் அவனோட போய் இருக்கமுடியறதில்லை, இதை அவனுக்குச் சொல்லவும் கூடாதுன்னு பூஜாரி சொல்லியிருக்கறான். மகன் என்கிற பாசத்தாலோ, இந்தத் தள்ளாத வயதிலே நிம்மதியா இருக்கலாமே என்ற எண்ணத்தாலேயோ, நான் அவனோட போய் இருக்கிறதுன்னா, என்னாலே, ஊருக்கே நாசம் வந்துடுமே, அந்தப் பாவத்தைச் சுமக்கச் சொல்றிங்களா. அவனும் குழந்தை குட்டிகளோட இப்ப சுகமா இருக்கறான்-நானும் அவனும் ஒரே கூறையின் கீழே இருக்க ஆரம்பிச்சா, அந்தப் பேய் அவன் குழந்தை குட்டிகளையும் 'காவு' கேட்டு விடும். அதனாலேதான், 'அக்கரை' போயிருக்கிற என் மகன் வருகிற வரையிலே என்ன வேதனையானாலும் அனுபவிச்சு கிட்டு இருக்கறதுன்னு ஏற்பட்டுப் போச்சு" என்று கிழவி கூறினாள். டாக்டருக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. எங்கே அந்தப் பூஜாரி?'; என்று கோபமாகக் கேட்டார்.அவன் செத்து வருஷம் ஆறு ஆவுதே" என்றாள் கிழவி.