பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


சரிந்துபோன சுவர்—பிய்ந்துபோன கூரை—அதன் நிலைமையும் கிழவியின் கோலமும் ஒரேவிதம்.

அக்கரையில், ‘மணி’—‘மார்க்’ ஆகி; மாதா கோவில் தோட்டத்தில் வேலைசெய்து ஒடிந்துபோய், பிறகு ‘உல்லாச உலகுக்கு’க் கயவன் ஒருவனால் இழுத்துச் செல்லப்பட்டு, கள்ளனாகி, அடிபட்டு, உதைபட்டு, செத்தும் போய் விட்டான்.

மூதாட்டிக்கோ, ‘மணி’ மளிகைக் கடை வைத்திருக்கிறானோ. மலர்த்தோட்டத்தில் வேலை பார்க்கிறானோ, மாடுமனை மனைவியோடு சுகமாக இருக்கிறானோ—எவ்விதம் இருக்கிறானோ, என்று எண்ணம். நல்லவிதமாகத்தான் இருப்பான் என்ற எண்ணம்—நல்லவிதமாக இருக்கவேண்டும் என்றுதானே தாய் உள்ளம் எண்ணமுடியும், அதனால்!

பாவிப்பய, ஒரு காலணாக் கடுதாசி போடக் கூடாதா, என்று, எண்ணி எண்ணி கிழவி ஏக்கம் பிடித்தலைவது கண்டு, முதலில் பலர் சமாதானம் கூறிப்பார்த்தனர்—கார்டுவிலை முக்காலணா கூட ஆகி விட்டது—‘பாவிப் பயமகன்’ காலணாக கடுதாசி போட்ட பாடில்லை—சமாதானம் கூறுவதைக் கூட மற்றவர்கள் நிறுத்திக் கொண்டனர்—கிழவியோ, ‘அக்கரை’ போகிறவர்களிடமெல்லாம், கடுதாசி, கொடுத்தனுப்புவதை நிறுத்தவில்லை. சிரஞ்சீவி மணிக்கு..... என்று துவங்கி முத்தம்மா என்று முடியும் அந்தக் கடிதம் ஒவ்வொன்றும், எவ்வளவு கன்னெஞ்சத்தையும் கரைத்துவிடும்—அவன்தான் கல்லறை சென்றுவிட்டானே—பலன் என்ன கிடைக்கும்!

ஓயாமல் கடிதங்கள்!

அந்தக் கிராமமும் அடிக்கடி, ‘அக்கரை’ க்கு. ‘அரும்பு மீசைகளை’ அனுப்பியபடி இருந்தது.