பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


நஞ்சை இருந்தது—புஞ்சையும் உண்டு! கரும்பு பயிராகும், கால்வாய் பாசனம் உண்டு-ஆனால் அவ்வளவும், நாலைந்து பெரியபுள்ளிகளுக்குச் சொந்தம்—அவர்களோ நாடாளும் நாயகர்கள் வரிசையில் இருந்தவர்கள்—எனவே தலை நகரில் வசித்து வந்தனர்.

அரும்பு மீசைகள், அக்கரை சென்று ஐந்தாறு ஆண்டு பாடுபட்டால். ஆயிரம் ஐந்நூறு மீதம்பிடித்து, அரையோ காலோ ஏகர் வாங்கி, பிறகு ஏதோ கால் வயிற்றுக் கஞ்சிக்குக் குறைவில்லாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுத்தான் சென்றனர்!

அவ்விதம் சென்றவர்களிலே ஒருவன் தான் மணி.

மணி, என்பது செல்லப் பெயர்—முழுப் பெயர் சிவசுப்பிரமணியம்!

‘அவர்’ இருந்தால் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிக் கொடுத்தாலும் உன்னை ‘அக்கரை’க்கு அனுப்ப மாட்டார் என்று கூறிக் கதறி, பிறகு மணியின் நெற்றியிலே பிள்ளையார் கோயில் ஐயர் கொடுத்த (ஒரு அணாவுக்கு!) விபூதியைத் தடவி, ஆயிரம் தெய்வங்களை வேண்டிக் கொண்டு, விடை கொடுத்தனுப்பினாள் கிழவி.

எப்போதாவது கொஞ்சம் ‘போடும்’ வழக்கம் உண்டு, மணிக்கு!

அக்கரை சென்றதும், அந்த ரகமானவர்களின் ‘நேசம்’ அதிகமாகி, ‘போடுவது’ வேகமாக வளர்ந்தது—அது அவனைப் படாத பாடு படுத்தி விட்டதுு—கல்லறை அவனை அழைத்துக்கொண்டது.

கிழவிக்குத் தன் ‘மகன்’ அக்கரையில் இருப்பதாக நினைப்பு.

‘யாரிட்ட தீவினையோ, என்னை அவன் மறந்து விட்டான்’ என்று எண்ணி வருந்தினாள்.