பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


ஆயிரம் தெய்வங்களை மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொண்டாள்—தெய்வங்களுக்கு, இதுதானா வேலை!—ஒரு திருவிழா முடிந்ததும் மற்றோர் திருவிழாவுக்குத் தங்களைத் தயாராக்கிக் கொள்வதற்கே காலம்போதவில்லை—அக்கரை சென்றவன் மனதிலே புகுந்து, இந்த ‘ஐயோபாவ’ த்தின் மீது பாசம் ஏற்படச் செய்யவா நேரம் கிடைக்கும்! அதிலும் கடல் கடந்து செல்லவேண்டும்!

அந்தக் கிராமத்துக்கு பெரிய பட்டினங்களெல்லாம் பொறாமைப்படக் கூடிய பெயர் இருந்தது—பொன்னூர்!!

ஜல்லடை போட்டுச் சலித்தெடுத்தால்கூட ஒரு குண்டுமணி பொன்னும் கிடைக்காத பட்டிக்காடு!—அதாவது பிள்ளையார்கோயில் சாமிவீடு தவிர! ஐயர் வீட்டிலே ‘சோதனை’யிடத் துணிவு கொண்ட ‘பாவிகள்’ உண்டா! மற்ற இடங்களிலே குண்டுமணி அளவு தங்கம்கூடக் கிடையாது—பெயர் மட்டும் பொன்னூர்!

பொன்னூருக்குப் பூர்வீகப் பெருமைகள் கூட உண்டு!

சீதாபிராட்டியாரை மயக்கிய மாயமான் ஓடிவந்த போது கிளம்பிய ‘தூசி’ அங்கு படிந்ததால் பொன்மயமாகி விட்டதாம் அந்த ஊர்!

மாரி கோயில் திருவிழாவின்போது ஆடுவெட்டி ஆண்டியப்பன், கதை படிப்பான். அப்படிப்பட்ட பொன்னூர் அக்கரைச் சீமைக்குக் கூலிகளை அனுப்பும் ‘பாக்யம்’ பெற்றுவிட்டது—அந்தத்தொகுதியிலே வெற்றி பெற்ற எம். எல். ஏ. கூட, கடல் கடந்த இந்தியர் பாதுகாப்புக் கமிட்டியில் ஓர் உறுப்பினர்—கமிட்டி கூடும்போது நாளொன்றுக்குப் பதினெட்டு ரூபாய் ‘படி’ச் செலவு கூடப் பெற்று வந்தார். ‘அக்கரை’ச் சீமைக்கு ‘அரும்பு மீசை’ கிளம்பும் போதெல்லாம், கண்ணீரும் கம்பலையுமாகக் கிழங்கள் கூடி கூடிப் பேசும்.