பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

177


10. பக்கோடா

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில், தென்னகத்தில் செலாவணியில் இருந்த நாணய வகைகளில் ஒன்று பக்கோடா என்ற தங்க நாணயம். இதனை முதலில் தயாரித்து வெளியிட்டவர் ராஜா காந்திவராஜ். (கி.பி. 1638-58) என்ற மைசூர் மன்னர். அவர் தமது இஷ்ட தெய்வமான விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான பன்றியின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டார். இந்த வராக முத்திரை காரணமாகவே இந்த நாணயம் பின்னர் வராகன் எனவும் பெயர் பெற்றது.

இத்தகைய நாணயம் பாரசீக மொழியில் பட்-கடர்' எனப்பட்டது. முகலாயப் பேரரசர்கள் பாரசீக மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு இருந்ததால், மைசூர் மன்னரும் தமது நாணயத்திற்கு பக்கோடா எனப் பெயர் சூட்டி வழங்கினார். இவரைப் பின்பற்றி ஆங்கில, போர்த்துகீஸிய, டச்சுக் காரர்களும் தென்னகத்தில் தங்களது பக்கோடா நாணயங்களைப் புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். போர்ச்சுக்கீஸியர் நாணயம் பேத்ரி பக்கோடா என்றும், டச்சுக்காரரது நாணயம் போர்ட்டோ நோவே பக்கோடா என்றும், ஆங்கிலேயர் நாணயம் ஸ்டார் பக்கோடா எனவும் குறிப்பிடப்பட்டன.

மறவர் சீமையைப் பொறுத்தவரையில், ஏனைய வெளி நாட்டினரைவிட, டச்சுக்காரர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. முத்து இராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சியின் பொழுது, மறவர் சீமைத் தறிகளில் தயாரிக்கப்படும் கைத்தறித் துணிகளைப் பெரும் அளவில் டச்சுக்காரர்கள் கொள்முதல் செய்து தேவிபட்டினம் துறைமுகம் வழியாக தரங்கம்பாடிக்கும் பின்னர் ஐரோப்பிய சந்தைகளுக்கும் அனுப்பி வைத்தனர். அதனால் டச்சுக்காரரது போர்ட்டோ நோவோ பக்கோடா நாணயம் இராமனாதபுரம் சீமையில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மிகவும் விறுவிறுப்பான செலாவணியில் இருந்தது. கி.பி. 1795-ல் இந்தச் சீமையின் ஆதிக்கத்தை மேற்கொண்ட ஆங்கிலக் கும்பெனியார் தங்களது ஸ்டார் பக்கோடா நாணயத்தை இங்கே செலாவணியில் ஈடுபடுத்தினர். என்றாலும் தொடர்ந்து நீண்ட காலம் வரை டச்சுக்காரரது