விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
11
வள்ளல் சீதக்காதி ஆவார்.[1] கிழக்கரை நகரின் பெருவணிகரான அவரது இயற்பெயர் செய்கு அப்துல் காதிரு மரக்காயர் ஆகும். இந்தக் கோட்டை அருகே நடந்த பெரும் போர்களில் கிழவன் சேதுபதி மதுரையிலிருந்து வந்த திருமலை மன்னரது படையையும் பின்னர் இராணி மங்கம்மாளது படையையும் அழித்து ஒழித்து, மறவர் குடியினரது மங்காத புகழை வரலாற்றில் பதித்து வைத்துள்ளார்.[2]
இந்தக் கோட்டை பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்விதம் காட்சியளித்ததாக :
" ...இந்தக் கோட்டை அரணில் நாற்பத்து நான்கு அலங்கங்கள் இருக்கின்றன. அதனைச் சூழ்ந்து அகழியும் உள்ளது. ஆனால் தண்ணிர் இல்லை. மழைக்காலத்தில் தான் இங்கு நீர் நிறைந்து இருக்கும். கோட்டையின் நாலாபுறத்திலும் பரந்த மைதானம். கோட்டை மீது பெரிதும் சிறிதுமான பீரங்கிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து நான்கு பெரிய பெங்காசிப் பீரங்கிகளும் உள்ளன. அவை வெடிக்கின்ற குண்டுகளை சுமார் இரண்டு மைல் தொலைவு வரையில் எறிய முடியும். மற்றும் இன்னும் ஐம்பது பீரங்கிகள், கோட்டைக்குள் உள்ளன இந்த கோட்டைக்கு கிழக்கே ஒரு பேட்டையும், அதனையடுத்து ஒரு கோவிலும்-குளமும் உள்ளன. வடக்கே ஏராளமான விளை நிலங்கள்... ஒரு ஆவணத்தில்[3] காணப்படுகிறது
ஆரவாரமில்லாது அமைதியாக இருந்த இந்த கோட்டையை கைப்பற்ற, கி.பி. 1771-ல் தஞ்சை மன்னன் துல்ஜாஜியினி தலைமையிலான பெரும் படை முயன்றது. இராமநாதபுரம் ஆட்சிக்கு உரிமை கொண்டாடிய மாப்பிள்ளைத் தேவனும் அவனது சகோதரனும் தஞ்சைப் படைகளை இராமநாதபுரச் சீமையின் வடகோடியில் உள்ள ஓருரில் இருந்து, இராமநாதபுரத்திற்கு வழி காண்பித்து அழைத்து வந்தனர். நவாப்பின் படைகளைப் போன்று மாறுடை தரித்த தஞ்சை மன்னரது மராத்தியப் படைகள் (4000 குதிரை வீரர்களும் 50,000