பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

41

சலாம்பூர் என வழங்கப்பட்ட காலிக்கிளாத் துணி நெசவு செய்யப்பட்டது. அவை 6. 7, , 8, 9, , 10 காலிக்கிளாத் என்றும், 32 க்யூபிக் பீட் நீளத்திலும் 24 கியூபிக் பீட் அகலத் திலும் நெசவு செய்யப்பட்டன. அவைகளில் அரை லாங்கிளாத்' என்றும் முழு லாங்கிளாத் என்றும் இரு வகைகளிருந்தன. இவை தவிர வேட்டிகள், சேலைகள், மஸ்லின் துணிகள், கைக்குட்டைகள் என பிறவகை துணிகளும் நெசவு செய்யப்பட்டன. பட்டு நூல்க்காரர்களது நெசவுப் பட்டறையில் பெரும்பாலும், மஸ்லின் துணியும், ஆங்கில, பிரஞ்சு, டச்சு நாட்டவர்களுக்கு ஏற்ற வகைத் துணிகளும் நெய்யப்பட்டன.[1]

இந்தத் தறிகளுக்கு மூவேந்தர் காலத்தில் விதிக்கப்பட்டது போன்று தறி இறை ஒன்று வசூலிக்கப்பட்டது. தறி ஒன்றுக்கு 4 சுழிப்பணம் என்பது பொதுவான வரியாகும். இது தவிர்த்து அரண்மனையில் திருமணம், முடிசூட்டுவிழா போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளின் போது, நெசவாளர்களிடம் வேறு ஒருவகையான வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது.[2] மற்றும், தறியின் உற்பத்தி அளவுக்கு தக்கவாறு, கூடுதல் சுங்கம் ஒன்றையும், நெசவாளர்கள் செலுத்தி வந்தனர். மன்னரது ஒப்பந்தத் தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, சென்னை ஆகிய நகர்களுக்கு, மன்னர் அனுப்பி வந்தார். இவ்விதம் மன்னரது வியாபாரத் தொடர்புகளின் எல்லைகள் பரந்து விரிந்து கொண்டிருந்தன. வடகோடியிலுள்ள வங்காளத்துடன் சங்கு வியாபாரமும், தென்கோடியிலுள்ள திருவாங்கூருடன் தெங்கு வியாபாரமும் தொடர்ந்து நடைபெற்றன. பிரஞ்சு, டச்சுநாட்டவருடன் வணிகத் தொடர்புகளைக் கவனிக்க சென்னையில் தனியாக வக்கீல் ஒருவர் நியமனம் செய்யப் பெற்றிருந்தார்.[3] இதைப்போன்று, கல்கத்தாவிலும், மன்னரது பிரதிநிதி ஒருவர் இருந்து வந்தார்.[4] இலங்கையுடனான எற்றுமதி இறக்குமதிகளைக் கவனிக்க பாம்பன் துறைமுகத்தில் தனியான அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தர்.


  1. Rov. cons. vol. 50-A. (1793), p. 542
  2. R. C. Vol. 50-A (1793), pp. 544-45
  3. M C Vol. 44-A (1793), P. 55.
  4. R. C. Vol. 62-A (1795), pp. 1796-97