இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
விடுதலை வீரர்கள் ஐவர்
ஏரைப் பிடித்த கரங்களில் வல்லயம்
- ஈட்டி முனைகள் பளபளக்க,
சோறு படைத்திடும் மெள்கரமும் ஒரு
- சூரிக் கத்தியைத் தாங்கிநிற்க,
தாலேலம் பாடிடும் தாயர் பகைவருக்
- காலோலம் பாடிக் கவண்சுழற்ற,
வாலைக் குமரியர் காதல் பரிசமாய்
- நாலு தலைகளைக் கோரி நிற்க,
தொட்டுத் தழுவிய பொற்கரமும் யுத்தக்
- கொட்டு முழக்கினைக் கேட்டவுடன்
நட்டிய மாமன் மகன்கரத்தில் வீரக்
- கங்கணக் காப்புகள் கட்டிவிட,
தீட்டிய வாள்முனை தீப்பறக்க, போரைத்
- தேடிய தோள்கள் தினவெடுக்க,
நாட்டினர் யாவரும் படைதிரளப் பகை
- மூட்டிய வெள்ளையன் போர்தொடுத்தான்
கும்பினியான் பீரங்கி குண்டுமழை பொழிந்தாலும்
கம்பளத்தார் போர்வீரம் கடுகளவும் குன்றவில்லை!
வானத்தை இருளாக்கி மண்டிவரும் கரும்புகையில்
மானத்தில் தலைசிறந்த வீரர்புகழ் மங்கவில்லை!
தோட்டாக்கள் உடலத்தைத் தும்புதும்பாய்ப் பிய்த்தாலும்
நாட்டாரின் தனிவீரம் நைந்துபட்டுப் போகவில்லை!
வேல்பிடித்த கரமருந்து வீழ்ந்தாலும், வேற்றுவரின்
கால்பிடித்துச் சரணடைய யாரும் கருதவில்லை!