பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தையின் குதூகலம்

145

சங்கருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இடிஇடியென்று சிரித்துவிட்டான். மணியை வெட்கம் பிடுங்கித் தின்றது. அந்த இடத்தைவிட்டு உடனே ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தான். ஆனால் ஹோட்டலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, அந்த உணர்ச்சியை மீறி நின்றது.

“ஏண்டா, மணி! நீ நிஜமாச் சொல்லுடா என்னாலே நம்பவே முடியலையே, உனக்கு ஹோட்டலைக் கூடவா தெரியாது?”

“நான் பொய் சொல்வேனா? எனக்கு நிஜமாவே தெரியாதுடா!’

"ஹோட்டல்னா ஒரே பட்சண மயமாயிருக்கும். பாதாம் ஹல்வா, குலோப்ஜான், குஞ்சாலாடு, ரஸ்குல்லா, ஜாங்கிரி, மைசூர்பாக்-இப்படி எத்தனை எத்தனையோ விதமான தித்திப்புப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும். அப்புறம் போண்டா, வடை, மிக்சர்-இப்படி எத்தனை எத்தனையோ விதமான காரப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும். கடைசியிலே காப்பி, டீ. எல்லாம் வேறே. கீழே வரிசை வரிசையாக மேஜை, நாற்காலி எல்லாம் போட்டிருக்கும்; நாமெல்லாம் போனதும் ஜம் மென்று அவற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டியது. என்ன வேணும்?"னு கேட்டுண்டே ஒருத்தன் வருவான். அவன் நமக்கு வேண்டியதைக் கொண்டு வந்து வைப்பான். ஒரு கை பார்த்து விட்டு, வாசலிலே உட்கார்ந்திருக்கும் "காஷியரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துட வேண்டியது!"

மணியின் நாக்கில் ஜலம் ஊறிற்று. அவன் அதைக் கூட்டி விழுங்கிக் கொண்டே, "ஏண்டா, நீ என்னென்னவோ சொல்றயே எனக்கு ஒண்ணுமே புரியலையேடா!" என்றான்தலையைச்சொறிந்து கொண்டே.

“ஆமாண்டா, அதெல்லாம் தலையைச்சொறிந்தாப் புரியாதுடா! பணம் இருக்கணும், பணம்" என்றான் சங்கர் சிரித்துக் கொண்டே.

மணியின் முகத்தில் அசடு வழிந்தது. ஆனாலும் அவன் அந்த இடத்தை விட்டு நகராமல், "உம்.....அப்புறம்?’ என்று மேலே ஆரம்பிக்கச் சொல்வது போல் சங்கரின் முகத்தைப் பார்த்தான்.

அதற்கேற்றாற்போல், "அப்பாலே நாங்கள் எல்லோரும் 'பீச்'சுக்குப் போனோம்!" என்று சங்கரும் நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தான்.

வி.க. -10