பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி பேசுகிறது!

219

ஐயோ! நம்மைக் காணாமல் அம்மா எப்படித் தவிக்கிறாளோ!

ஆம், ஆம். அவள் பேச்சைக் கேட்காத நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டியதுதான்!

இப்படியெல்லாம் என்ன வெல்லாமோ எண்ணியெண்ணி என் மனம் அலை பாய்ந்தது.

அந்தச் சிறுமிகளோ என்னுடைய சுதந்திர வேட்கையைக் கொஞ்சமாவது பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ராஜோபசாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.

என்னுடைய சிறைச்சாலைக்குத்தான் எத்தனை விதமான சிங்காரம் எத்தனை விதமான வர்ணப் பூச்சு; எத்தனை விதமான பட்டுக் குஞ்சங்கள்!

"ஆஹா அதன் அழகுதான் அவர்களுக்கு எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது!

என்னை அடிமை கொண்ட அவர்களுக்கு வேண்டுமானால் அந்தப் பாழும் சிறைச் சாலை ஆனந்தத்தை அளிக்கலாம்; அடிமைப்பட்ட எனக்கோ? அதைப்பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம்தானே பற்றிக் கொண்டு வருகிறது!

எனக்கு மட்டும் போதிய பலம் இருந்திருக்குமானால், அதை அன்றே உடைத்தெறிந்து விட்டல்லவா வெளியே வந்திருப்பேன்?

* * *

வேடிக்கையைக் கேளுங்கள்; அதே பங்களாவில் என்னைப் போல் ஒரு நாயும் வளர்ந்து வந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரே எரிச்சலாயிருக்கும். அதன் அடிமை வாழ்வில்தான் அதற்கு எவ்வளவு திருப்தி!

"நன்றியுள்ள பிராணி" என்று பெயரெடுக்க வேண்டுமாம், பெயர் அதற்காக அது தன்னை யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்துவதில்லை. "சீ, நாயே!” என்று எத்தனை முறைதான் விரட்டியடிக்கட்டுமே இல்லை, செருப்பால்தான் அடித்துத் துரத்தட்டுமே-ஊஹூம், அப்போதும் அது வாலை ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பின்னால் சுற்று சுற்று என்று சுற்றிக் கொண்டு தானிருக்கும். அதற்குச் சுந்திரமும் வேண்டாம்.