பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

விந்தன் கதைகள்

"ஆமாம், உன்னை நான் புழக்கடைப் பக்கமாகத்தானே வரச் சொன்னேன்? நீ ஏன் இந்தப் பக்கமா வந்தே?" என்று கேட்டார் அந்த ஆஜானுபாகு.

"அந்த பக்கமாகத்தான் வந்தேன், சாமி! அங்கே இந்த நல்லமுத்துப் பய இல்லே; அவன் நின்னுக்கிட்டிருந்தான்; அவனுக்கு நம்ம விசயம் தெரிவானேன்னு இப்படி வந்துட்டேன்!" என்றான் பேச்சிமுத்து.

"தெரிஞ்சா, என்னடா அந்தப் பய உன்னை வெல்லத்திலே வெச்சு முழுங்கிடுவானா? அந்த மாதிரிச் சோனிப்பயங்களுக்கெல்லாம் நீ ஒண்ணும் பயப்பட வேணாம். நாளையிலே யிருந்தாச்சும் நீ புழக்கடைப் பக்கமா வா; உன்னைப்போல் எத்தனையே பேர் அந்தப் பக்கமா வரப்போ, நீ மட்டும் இந்தப் பக்கம் வருவானேன்?" என்று ஊக்கமூட்டிய வண்ணம் அவனைப் புழக்கடைக்கு அழைத்துச் சென்றார் புஷ்பராஜின் தகப்பனார்.

இப்பொழுது தான் புழக்கடையில் பூட்டியிருந்த ஓர் அறை புஷ்பராஜின் ஞாபகத்துக்கு வந்தது. முதல் நாள் இரவு அவன் புழக்கடைப் பக்கமே போகவில்லை; மறுநாள் காலையில்தான் அந்தப் பக்கம் போயிருந்தான். அப்போது பூட்டியிருந்த அந்த அறையையும் பார்த்தான். அதற்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவனுக்குக் காலையில் விருப்பமில்லை. இப்போது தன்னுடைய தகப்பனார் பேச்சிமுத்தைப் புழக்கடைப் பக்கமாக அழைத்துச் செல்லவே, அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான்.

ஆனால் தன் மகன் தன்னுடன் வருவதைத் தகப்பனார் விரும்பவில்லை. அவர் அவனைத் தடுத்து நிறுத்தி, "இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுக்கிடாதே போ, போய் உன் வேலையைப் பாரு இல்லாட்டா, ஏதாச்சும் ஒரு புத்தகத்தை எடுத்து வச்சிகிட்டுப் படி" என்றார்.

"இருக்கட்டும் அப்பா உங்களுடைய வேலையை நானுந்தான் கொஞ்சம் பார்க்கிறேன்" என்றான் புஷ்பராஜ்.

"அப்படின்னா எனக்குச் சந்தோசந்தான் - ஆனா இந்த விசயம் அக்கம் பக்கம் தெரியக்கூடாது ஆமாம், கபர்தார்!" என்று எச்சரித்தார் தகப்பனார்.