பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலையெழுத்து

யில் சிநேகிதன் பஸ் சிநேகிதன், நாடகமேடை சிநேகிதன், சினிமாக் கொட்டகை சிநேகிதன் இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் என்று எத்தனையோ சிநேகிதர்கள் தோன்றித் தோன்றி மறைகிறார்களல்லவா? அதேமாதிரிதான் செங்கண்ணனும், கருங்கண்ணனும் என்னுடைய கடற்கரைச் சிநேகிதர்களாகத் தோன்றினார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் அவர்கள் மறைந்து விடவில்லை; கடற்கரைக்குப் போகும் போதெல்லாம் என் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிலும் என்மேல் அளவில்லாத நம்பிக்கை அவர்களுக்கு, அதற்குக் காரணம் என்னவென்றே புரியவில்லை எனக்கு. ஒருவேளை நான் வழக்கமாக அணிந்து வரும் கதராடைதான் காரணமாயிருக்குமோ?

இருக்கலாம். அவர்களுக்குத்தான்கதர் அணிந்தவன்களெல்லாம் காந்தி மகான்களாச்சே! அன்று மாலை நான் வழக்கம்போல் கடற்கரைக்குப் போய் சேர்ந்தபோது, செங்கண்ணனும், கருங்கண்ணனும் கட்டுமரத்துடன் கரையேறிக் கொண்டிருந்தார்கள். "என்ன செங்கண்ணா, இன்று எப்படி வேட்டை?" என்றேன் நான்.

"ஒன்னும் சொகம் இல்லைங்க, பாழாப்போன காத்து தான் இப்படி அடிச்சுத் தொலைக்குதே! கொஞ்சம் ஏமாந்தா ஆளையே தூக்கிகிட்டு இல்லே போயிடும்போல இருக்குது!" என்றான் செங்கண்ணன்.

"அதாச்சும் நடக்குதா, ஒரு நாளைப்போலப் பொறந்து பொறந்து சாகாம, ஒரேடியா செத்தாச்சும் தொலையலாம்!" என்றான் கருங்கண்ணன்.

நான் சிரித்தேன்.

"என்னா சாமி, சிரிக்கிறீங்க?"

"இன்னும் பத்து வருஷம் வாழ்ந்தால் தேவலை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் இன்றே செத்தால் தேவலை என்று நினைக்கிறீர்கள்?"

"யார் யாருக்கு எதிலே சொகம் கெடைக்குமோ அதிலேதான் ஆசை இருக்கும் சாமி?"