பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

விந்தன் கதைகள்

"சரி, 'ஓட்டல் தி ஹெவ'னுக்கு நீயே வந்து விடுகிறாயா?" என்றார் அவர்.

"வருகிறேன், ஸார்!" என்றான் அவன்.

இருவரும் மேலே நடந்தார்கள். ஹோட்டலை அடைந்ததும் பெட்டி - படுக்கையை இறக்கிக் கீழே வைத்துவிட்டுக் கையை நீட்டினான் முத்து. அவன் நீட்டிய கையில் நாலணாவை எடுத்துப் போட்டு விட்டுத் திரும்பினார் உல்லாசப் பேர்வழி.

"ஸார், ஸார்! இன்னும் ஒரே ஒரு நாலணா-தர்மத்துக்குக் கொடுப்பது போல் கொடுங்கள் - ஒரு முக்கியமான காரியத்துக்கு வேணும்!" என்று பல்லைக் காட்டினான் அவன்.

"நாலணா என்ன, நாலு ரூபாயே வேண்டியிருக்கும் உனக்கு! அதற்கெல்லாம் நானா ஆளு? போ, போ!"

"கோபித்துக் கொள்ளாதீர்கள்; கொஞ்சம் தயவு செய்யுங்கள்!"

"தயவாவது, தாட்சண்யமாவது?- இந்தக் கூலிக்காரர்களே இப்படித்தான்; லேசில் ஆளை விட மாட்டார்கள்- இப்போது நீ மரியாதையாகப் போகிறாயா, இல்லையா?" என்று கத்தினார் அவர்.

"வேறு நாளாயிருந்தால் உங்களை இவ்வளவு கோபத்துக்கு உள்ளாக்கி யிருக்கமாட்டேன், ஸார் இன்று ஓர் அவசரம்; அவசியம்; அதனால்தான் கேட்கிறேன் - ஒரே ஒரு நாலணா!" என்று கெஞ்சியபடி அழவே ஆரம்பித்துவிட்டான் அவன்.

"நாலணா கிடைக்காது உனக்கு, நாலு அறைதான் கிடைக்கும்!" என்று கையை ஓங்கினார் அவர்.

அதற்குள் பொறுமை இழந்த ஹோட்டல் முதலாளி, "அவனுடன் ஏன் ஸார், அனாவசியமாகத் தகராறு? பேசாமல் போலீசுக்குப் போன் செய்வதை விட்டு விட்டு?" என்று 'பெரிய மனிதத் தோரணை'யோடு சொல்லிக்கொண்டே, 'ரிஸிவ'ரைக் கையில் எடுத்தார்.

பாவம், அதற்கு மேல் என்ன செய்வான் முத்து? - அழுத கண்ணீரைத்துடைத்துக்கொண்டே திரும்பினான்; 'ஒரே ஒரு நாலணா, ஒரே! ஒரு நாலணா! என்று பித்துப் பிடித்தவன் போல் பிதற்றிக் கொண்டே அங்குமிங்குமாக அலைந்தான் ஆனால் என்ன பிரயோசனம்? மணி ஐந்தரையாகியும் அந்த ஒரே ஒரு நாலணா அவனுக்குக் கிடைக்கவில்லை!