பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

விந்தன் கதைகள்

தனக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தவன் என்ன ஆனான்? "கதிர்வேல், கதிர்வேல்!" என்று குரல் கொடுத்துப் பார்த்தான் கோவிந்தசாமி, பதில் இல்லை.

எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு மூலையில் ஓர் ஆள் உயரத்துக்குமேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 'ரீம்'களின்மேல் அவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

"அட பாவி இன்று நீ சோறு கொண்டு வரவில்லையா, என்ன?-ம், கொண்டு வந்திருந்தால் படுப்பதற்கு அந்த மூலையை ஏன் தேடியிருக்கப் போகிறாய்?"-அவிழ்த்த கட்டுச் சோற்றை அப்படியே கட்டி வைத்துவிட்டுச்சென்று அவனை எழுப்பினான் கோவிந்தசாமி.

"ஏண்டா, இன்னுமா நீ சாப்பிடவில்லை?" என்று தான் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதுபோல் அவனைக் கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான் கதிர்வேலு.

"உன்னை விட்டுவிட்டுச் சாப்பிடும் அளவுக்கு நான் இன்னும் 'பெரிய மனிதனாகி விடவில்லையே? இறங்கி வா, இருப்பதை இருவரும் பகிர்ந்து கொள்வோம்."

"வேண்டாம், அது உனக்கும் போதாது; எனக்கும் போதாது!"

"மனம் 'போதும்' என்று சொல்லும்போது வயிறு 'போதாது' என்று சொல்லாது; நீ வாடா!" என்று அவனை இழுத்துக்கொண்டு வந்தான் கோவிந்தசாமி.

இருவரும் உட்கார்ந்தனர்; "இருப்பதைப் பகிர்ந்து கொள்வதற்குக்கூட இன்னோர் இலை வேண்டுமே?" என்றான் கதிர்வேலு.

"ஏன், இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டால் என்னவாம்?"

"அது அவ்வளவு நன்றாயிருக்குமா?" என்றான் அவன், கொஞ்சம் அருவருப்புடன்.

"ஓட்டலில் எத்தனையோ பேர் சாப்பிட்ட எச்சில் தட்டில் நாமும் சாப்பிடுகிறோமே, இங்கே ஒருவருடைய எச்சில் இலையில் இன்னொருவர் சாப்பிடக் கூடாதா?" என்றான் இவன், கொஞ்சம் விறுவிறுப்புடன்.

"அது நாகரிகம்; இது அநாகரிகமில்லையா?" என்றான் கதிர்வேலு சிரித்துக்கொண்டே.