456
விந்தன் கதைகள்
"நீங்கள் வீட்டுக்குப் போகலாம்!" என்றான் அவன் துணிந்து.
"நான் கூடவா?" என்றான் கோவிந்தசாமி. 'கூடவா' என்பதற்கு மட்டும் கொஞ்சம் கூடுதலான அழுத்தம் கொடுத்து!
"ஆம், முதலாளியின் உத்தரவு அது!" என்றான் கதிர்வேலு, தன்னை அவனிடம் காட்டிக் கொடுத்துக் கொள்ள விரும்பாமல்,
"இருக்கும், இருக்கும்!" என்றான் ஏகாம்பரம்.
"இல்லாமலா சொல்வார், போர்மேன்?" என்றான் பீதாம்பரம்.
"போர்மேன் இல்லை அப்பா, 'பொய்மேன்' என்று சொல்லு!" என்று அவன் சொன்னதைத் திருத்தினான் ஆரோக்கியசாமி.
"வருந்துகிறேன் நண்பா, உன்னைப் பொய் சொல்ல வைத்ததற்காக நான் வருந்துகிறேன்!" என்றான் கோவிந்தசாமி.
"எனக்காக நீ ஒன்றும் வருந்த வேண்டாம்!" என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொன்னான் கதிர்வேலு.
கோவிந்தசாமிசிரித்தான்; சிரித்துவிட்டு, "ஆஹா! பதவி மோகம் ஒருவனைப் பிடித்துவிட்டால், அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று அன்றொரு நாள் அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிச் சொல்லிவிட்டு நடந்தான்.
அதற்குள் முதலாளியைப் பார்த்துவிட்டு வந்த அருணாசலம், "பார்த்தாயா, அவன் உன்னையே வீட்டுக்கு அனுப்பிவிட்டான்!" என்று தன் அடுத்த முயற்சியை அன்றே ஆரம்பித்து வைத்தான்.
அதற்கும் சிரித்தான் கோவிந்தசாமி; சிரித்து விட்டு, "அவன் என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை; தன்னைத் தானே அனுப்பிக் கொண்டிருக்கிறான்!" என்றான், தீர்க்கதரிசனத்துடன்!