பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

விந்தன் கதைகள்

இதுவே 'எல்லாரும் இந்நாட்டு மன்னராகி விட்ட இந்தக் காலத்தில், 'எல்லாரும் இந்நாட்டுக் கவிஞர்' என்று நினைக்காமல் நினைத்துக்கொண்டு விட்ட நம் கவிஞர் பிரானின் குடும்ப வரலாற்றுச் சுருக்கமாகும்.

ரு நாள், "ஆற்றங்கரைக்குச் சென்று, அங்குள்ள இயற்கை அழகில் ஈடுபட்டு நின்றால் நல்ல கவிதை - நாட்டு மக்களைப் போற்றிப் புகழ வைத்துப் பொன்னாடை போர்த்தி, எடைக்கு எடை பொற்காசும் அளிக்க வைக்கும் கவிதை தானாகவே பிறக்கும்!" என்று சகக் கவிஞர் ஒருவர் பரிந்துரை நல்க, அங்ஙனமே கலிஞர் ஒன்பாற்சுவையார் ஆற்றங்கரைக்குச் செல்ல, அங்கே 'கா, கா' என்று பல காகங்கள் ஏக்காலத்தில் கரைந்தவாறு தரையோடு தரையாகப் பறந்து கொண்டிருக்க, கவிஞர்பிரான் அவை சுற்றிச் சுற்றி வந்த இடத்தை நெருங்கி உற்று உற்று நோக்க, குயிற் குஞ்சு ஒன்று கீழே விழுந்து கிடக்க, "இயற்கைக் கவிஞனன்றோ இக் கதிக்கு உள்ளாகியுள்ளான்!" என்று கவிஞர் பெருமான் கனிவே உருவாய் அதை எடுக்க, அக்கணமே ஆயிராயிரம் காகங்கள் எங்கிருந்தோ படையெடுத்து வந்து அன்னார் தலையைப் 'பதம்' பார்க்க, ‘தலை தப்பினால் போதும்!' என்று 'இயற்கைக் கவிஞ'னை அங்கேயே விட்டுவிட்டு, 'இட்டிலியின் இன்முகம் காண' வீட்டுக்கு விரைந்து வரலானார் செயற்கைக் கவிஞர்!'

அதுபோது, "காலையிலேருந்து ஒரு பைசாவுக்குக்கூடப் 'போனி'யாகாமல் சுட்டுப் போட்ட இட்டிலி - மசால் வடை அத்தனையையும் அப்படியே வெச்சிகிட்டு நான் அவதிப்பட்டுகிட்டிருக்கேன், உனக்கு இட்டிலியா வேண்டும், இட்டிலி?" என்று இரைந்தபடி, இன்பவல்லி அம்மையார் கவிதா தேவியின் முதுகில் கடைசி 'முத்தாய்ப்'பை வைத்துக் கொண்டிருக்க, 'கவிதாதேவிக்கே இந்தக் கதியென்றால் தமக்கு என்னகதியோ!' என்ற கலக்கத்துடன் கவிஞர் பெருந்தகை உள்ளே நுழைய, அதுகாலை யாரோ ஒரு பெருமாட்டி வந்து ஆறு காசுக்கு இட்டிலியும் மூன்று காசுக்கு மசால் வடையும் வாங்கிக் கொண்டு ஏக, 'வாழ்க நீ அம்மா, வாழ்க நீ அம்மா!' என்று அந்த 'அபயாம்பா'ளைத் தமக்குள் வாழ்த்திக் கொண்டே ஒன்பாற்சுவையார் அமர, இரண்டு இட்டிலி கொண்ட தட்டு ஒன்று அன்னாரை நோக்கி 'விர்'ரென்று சுழன்று வர, கவிஞர்பிரான் அதைத் தடுத்து நிறுத்தி உற்று நோக்குவாராயினர்.