பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு

விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? - எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே மலர்ந்த காதல், பிஞ்சு விடவில்லை!

வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவன் "லக்ஷ்மி!" என வேண்டியது; அவள் 'ஏன்?!' என வேண்டியது - மாதாந்திர பட்ஜட், மைத்துனன் வருகை, அடுத்த வீட்டுக்காரியின் புதுப் புடவை, அவள் அகமுடையானின் வருமானம் ஆகியவற்றைப் பற்றி ஏதாவது பேச வேண்டியது; அவ்வளவுதான் - 'அப்பப்பப்பா!' 'அம்மம்மம்மா!' என்று தெத்தித் தெத்திப் பேசுவதற்கும், 'என் கண்ணா வாடா!' என்று கொஞ்சுவதற்கும் இடையிடையே, 'ங்கா, ங்கா' என்ற இன்பநாதம் எழுப்புவதற்கும் 'ச்,ச்,ச்!' என்ற இன்ப ஒலி கிளம்புவதற்கும் என்ன வேண்டுமோ, அந்தப் பிஞ்சு அந்த மூன்றாவது ஜீவன் - அவர்களுக்கு இல்லவே இல்லை!

அருணோதயத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை ‘வீல், வீல்' என்று கத்தும். அதன் அப்பா அந்த நேரத்தில் தான் ஏதோவிழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருப்பார். அடுப்பண்டை ஏதோகாரியமாக இருக்கும் அம்மா, "எழுதிக் கிழித்தது போதும்; அந்தக் குழந்தையைக் கொஞ்சம் தூக்குங்கள்!" என்பாள். "குழந்தையை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டால் போதுமா? - வா, உன்னையும் தூக்கி வைத்துக் கொள்கிறேன்" என்று எரிந்து விழுவார் அப்பா. இருவரிடையேயும் வார்த்தை வளர்ந்து கொண்டே போகும். கணவன் அழகைப் பற்றி மனைவியும், மனைவியின் அழகைப் பற்றிக் கணவனும் காரசாரமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் அம்மாவும் குழந்தையோடு சேர்ந்து அழுது தீர்க்கும் கட்டம் வரும் வரை, நாராயணனும் லக்ஷ்மியும் அந்தத் குழந்தை அழுவதை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்!

"இந்தக் கிராமபோன் கம்பெனிக்காரர்கள் எதையெல்லாமோ ‘ரிகார்ட்' செய்கிறார்களே, ஒரு குழந்தையை நல்லாக் கத்தவிட்டு 'ரிகார்ட்' செய்யக் கூடாதோ?" என்பாள் லக்ஷ்மி.

"அவர்களென்ன, இந்த ரேடியோக்காரர்களையுந்தான் பாரேன்? தினசரி எத்தனையோ பேரை மாறி மாறி அழ வைக்கிறார்கள் - ஒரு