பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரு திருடர்கள்

491

"சரி, மன்னித்தேன்!" என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி, கையை நீட்டி அவனை ஆசீர்வதித்தான் பீட்டர்!

"பாவம், பிழைத்துப் போகட்டும்; அவனைப் பற்றி அப்பாவிடம் ஒன்றும் சொல்லிவிடாதே!-உனக்கு மாங்காய் என்றால் ரொம்பப் பிடிக்குமா? இப்படி வந்து உட்கார்; இப்பொழுதே இரண்டு கூடைநிறைய மாங்காய் பறித்துத்தரச்சொல்கிறேன்!” என்று அவனை உட்கார வைத்துவிட்டு, காவற்காரனை ஏவினார் மாணிக்கவாசகம்.

அடுத்த அரை மணி நேரத்துக்கெல்லாம் நிறைந்துவிட்ட இரண்டு கூடை மாங்காய்களை எடுத்துக்கொண்டு போய்க் காரில் வைத்துவிட்டு வந்தான் காவற்காரன்.

"ஏ, டிரைவர்! தம்பியையும் காரில் ஏற்றிக் கொண்டு போய்க் கலெக்டர் ஐயாவின் வீட்டிலே விட்டுவிட்டு வா; என்னுடைய வணக்கத்தையும் நான் அவருக்குத் தெரிவித்துக் கொண்டதாகச் சொல்லு!" என்றார் மாணிக்கவாசகம்.

அவ்வளவுதான்; கார் பீட்டருடன் பறந்தது!

வழியிலிருந்து ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு, "தம்பி, ஒரு நிமிஷம் காரிலேயே உட்கார்ந்திருக்கிறாயா? நான் போய் ஒரு 'டீ'அடித்து விட்டு வந்துவிடுகிறேன்!” என்றான் டிரைவர்.

அவன் எப்போதுமே டீ குடிப்பதில்லை; அடிப்பதுதான் வழக்கம்!

"சரி, போய் வா!" என்றான் பீட்டர்.

இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த டேவிட், "ஏண்டா, பீட்டர் இதெல்லாம் என்ன?" என்று கேட்டான் வியப்புடன்.

"வெகுமதி; திருடனுக்கு வெகுமதி!" என்று தன் தோள்கள் இரண்டையும் ஒரு குலுக்குக் குலுக்கிக் காட்டினான் பீட்டர்.

"அடாடா தானும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் இந்த வெகுமதி தனக்கும் கிடைத்திருக்குமே?" என்று நினைத்தான் டேவிட்!

அந்தஸ்தைப் பற்றி அறியாத அந்த அசட்டுப் பயலுக்கு என்ன கிடைத்திருக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே?