பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

விந்தன் கதைகள்

இம்மாதிரி விஷயங்களுக்காக நாராயணன் இப்பொழுதெல்லாம் அவளைக் கோபித்துக் கொள்வதில்லை; ஏனெனில், அவனுக்கு விஷயம் விளங்கி விட்டது. இல்லையென்றால் இத்தனை நாளும் அவள் விரும்பிக் கேட்டதையே வாங்கிக் கொடுக்காத நாராயணன், இப்பொழுது அவள் கேட்காததையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பானா?

அன்றொரு நாள் வாங்கி வந்தீர்களே ரோஸ் ஜாங்கிரி, அது ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது!" என்று லக்ஷ்மி இப்போது சொன்னால் போதும்; அன்று மாலையே அதேமாதிரி ஜாங்கிரியில் ஒரு டஜன் வந்து சேர்ந்துவிடும்.

"இன்று காலை என் சிநேகிதி ஸரஸா இங்கே வந்திருந்தாள். ரேடியோ வளையலாம், ஒன்றுக்கு இரண்டு சவரன் ஆகிறதாம் கைக்கு ஒன்று செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள். பாதகமில்லை. பார்ப்பதற்கு நன்றாய்த் தான் இருக்கிறது!" என்று சொன்ன லக்ஷ்மி வாயெடுக்க வேண்டியது தான்; "அதற்கென்ன இன்னும் ஒரே வாரத்தில் நாமும் அதேமாதிரி இரண்டு செய்துவிட்டால் போச்சு!" என்பான் நாராயணன்.

"எதிர் வீட்டுக்காரி கட்டிக் கொண்டிருக்கிறாள் ஏரோப்ளேன் பார்டர் போட்ட புடவை. எப்படியிருக்கிறது தெரியுமா? விலை எண்பது ரூபாய்தானாம்?" என்பாள் லக்ஷ்மி.

அவ்வளவுதான்; அந்த மாதக் கடைசியில் சம்பளம் வாங்கியதும், நாராயணனின் முதல் வேலை மேற்சொன்ன புடவையை வாங்கிக் கொண்டு வருவதாய்த்தானிருக்கும்!

நாராயணன் - இப்படியெல்லாம் லக்ஷ்மியைக் கண்ணுங் கருத்துமாக கவனித்து வந்தும், அவளுடைய வேதனை மட்டும் குறையவில்லை. ஒன்று போனால் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல டாக்டர் 'பில்'லும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

ஒரு நாள் நாராயணன் ஏதோ எண்ணித்துணிந்தவனாய் 'லக்ஷ்மி, லக்ஷ்மி! இது எத்தனையாவது மாதம்?' என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டான்.

"ஆறாவது!" என்று சொல்லிவிட்டு, அவள் உள்ளே ஓடிவிட்டாள்!