பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு

339

"அவன் அங்கே எப்படியிருக்கிறானோ? - வீட்டில் தான் வேறுயாரும் கிடையாதே, உன்னை ஏன் அவன் ஏழாவது மாதமே இங்கு அனுப்பி வைக்க வேண்டும்? ஒன்பதாவது மாதம் அனுப்பி வைத்திருக்கக் கூடாதோ?" என்றாள் லக்ஷ்மியின் தாயார்.

"நானும் அதைத்தான் சொன்னேன்; அவர் கேட்டால்தானே? - ஒருவேளை நான் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது....?"

"சீ சீ!அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது; டாக்டர் செலவுக்குப் பயந்து அவன் ஒருவேளை உன்னை இங்கே அனுப்பியிருக்கலாம்!”

"ஆமாம், வண்டு மதுவைத்தானே விரும்புகிறது, மலரையா விரும்புகிறது?"என்று அவர்களுடைய பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் லக்ஷ்மியின் தகப்பனார்.

இதைக் கேட்ட நாராயணன் தலையில் இடி விழவில்லை; இமயமலையே பெயர்ந்து வந்து விழுந்தது!

"அடக் கடவுளே! அன்பின் லட்சணம் இதுதானா? - இதற்கா நான் இவ்வளவு பாடுபட்டேன்? - எல்லாம் எனக்காக என்றால், அன்று கஞ்சியைக் காலில் கொட்டிக் கொண்டு, கதிகலங்கிப் போனதுகூட அவளுக்காக இல்லையா? மஞ்சள் தூளை மிளகாய்த் தூள் என்று எண்ணி அன்றிரவு கத்திரிக்காய்க் கறியில் கொட்டிவிட்டு, கடைசியில் மருந்தை விழுங்குவதுபோல் விழுங்கித் தொலைத்தேனே, அதுகூட அவளுக்காக இல்லையா? - அதெல்லாம் போகட்டும்; எப்படியாவது அவள் சந்தோஷமாயிருந்தால் போதும்!" என்று எண்ணி, அளவுக்கு மீறி அங்கங்கே கடனை வாங்கிவிட்டு இப்போது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேனே, அது கூடவா அவளுக்காக இல்லை...?'

எண்ணம் முடிவடையவில்லை; அதற்குள் அவன் வந்த வழியே திரும்பிவிட்டான்

சிறிது நேரத்திற்குப் பிறகு 'எங்கே இருக்கிறோம்?' என்று அவன் தன்னைக் கவனித்தபோது தான் சென்னையை நோக்கிப் போகும் ரயிலில் தான் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது!