பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

530

விந்தன் கதைகள்

இந்தச் சமயத்தில் அங்கு வந்து உட்கார்ந்து 'கா' 'கா' என்று கரைந்த காக்கைகளை ‘ஸ் ஸ்' என்று விரட்டி 'அபிமானி'களின் மேல் தமக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை ஒருவாறு தீர்த்துக் கொண்டார் ஒலிப்பதிவாளர்!

எல்லோருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு 'நட்சத்திரப் புன்னகை' புரிந்து விட்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பினார் குமாரி கும்கும்.

ழியில் "ஏண்டி குப்பாயீ; பேபிக்குப் பிஸ்கெட் வாங்க வேண்டுமென்று சொன்னாயே?" என்றாள் பாட்டி.

"ஏன் பாட்டி, என்னைக் 'குப்பாயி குப்பாயி' என்று கூப்பிடாதே என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுகிறது? என்று எரிந்து விழுந்தாள் குமாரி கும்கும்.

"இனிமேல் சொல்ல வில்லையடி, அம்மா! இப்போது நீ 'டவு'னுக்குப் போகப் போகிறாயா? இல்லையா?"

"போகத்தான் வேண்டும்; இருந்த பிஸ்கட்டெல்லாம் தான் நேற்றே தீர்ந்து போய் விட்டதே!"

"சரி, வண்டியைத் திருப்பச் சொல்லு; வாங்கிக் கொண்டு போவோம்" என்றாள் பாட்டி.

"அதென்ன பாட்டி, நீங்கள் சொன்னால் திருப்ப மாட்டேனா?" என்றான் டிரைவர் முத்து சிரித்துக் கொண்டே.

"வாயை மூடுடா, உனக்குமா நான் பாட்டியாய்ப் போய் விட்டேன்?" என்றாள் அந்த நித்தியகன்னி.

"இல்லை மேடம் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே சென்று, நிறுத்த வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்தினான் முத்து.

அவ்வளவுதான்; அங்கிருந்த அனாதைச் சிறுவர், சிறுமியரெல்லாம் - பாரத புண்ணிய பூமியில் பூத்த பைந்தமிழ் மலர்களெல்லாம் அந்தக் காரைச் சூழ்ந்து கொண்டு வாயையும் வயிற்றையும் காட்ட ஆரம்பித்து விட்டன.

"அவமானம், நகரத்துக்கே அவமானம்!" என்றாள் கும்கும்.

"நகரத்துக்கு மட்டும் என்னடி, நாட்டுக்கே அவமானம் என்று சொல்லு" என்றாள் கௌரவம் மிக்க பவுனாம்பாள்.