பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்க்கையும்

531

"இறங்கினால் இந்த அவமானங்கள் என்னையே சாப்பிட்டு விடும் போலிருக்கிறதே!" என்றாள் குமாரி கும்கும்.

"ஆமாம், நீ இறங்காதே! முதலில் முத்துவைக் கீழே இறங்கி அவற்றை விரட்டச் சொல்லு!”

முத்து சிரித்தான்; சிரித்துக் கொண்டே தன்னிடமிருந்த பத்துக் காசைஎடுத்து அந்த அவமானங்களில் ஒன்றை அழைத்துக் கொடுத்து விட்டு "என்னிடமிருந்தது இவ்வளவுதான்; இதை எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்!" என்றான். அதை வாங்கிக் கொண்டு அவை சிட்டாய்ப் பறந்ததும் "இறங்குவோமா?" என்றாள் பாட்டி.

"எதற்கு இவனிடம் கொடுத்தால் இவனே வாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்!" என்று சொல்லிக் கொண்டே இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து முத்துவுக்கு முன்னால் விட்டெறிந்து, "ஒரு டின் பிஸ்கெட் வாங்கிக் கொண்டு வந்து வண்டியில் வை!" என்றாள் பேத்தி.

அப்படியே வாங்கிக் கொண்டு வந்து வைத்து விட்டு "போவோமா?" என்றான் முத்து.

"போக வேண்டியதுதான்!" என்றாள் நடிகை கும்கும்.

இந்தச் சமயத்தில் "ஏண்டி, 'நாலு பாவாடைக்கு ஸாட்டினும் நாலு தாவணிக்கு நைலானும் வாங்கிக் கொடு, வாங்கிக் கொடு!' என்று நானும் எத்தனை நாட்களாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன்? இன்றாவது வாங்கிக் கொடேண்டி!" என்றாள் பவுனாம்பாள்.

"அதற்கென்ன, வாங்கிக் கொண்டால் போச்சு!" என்றாள் கும்கும்.

இருவரும் இறங்கி முக்காட்டை இழுத்துப் போத்திக் கொண்டு எதிர்த்தாற் போலிருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தார்கள்.

அதுதான் சமயமென்று முத்து வண்டிக்குப் பின்னால் சென்றான்; ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நின்றான்.

குப், குப், குப்

"ஆகா! என்ன சுகம், என்ன சுகம்!

'ஏர் கண்டிஷன் ரூ'மின் குளுமை இமாசல வாசத்தின் பெருமை எல்லாம் இந்தப் பீடியிலல்லவா இருக்கிறது, எனக்கு!'

இந்த ரசனையில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்த அவனை, "ஏய், என்ன அது?" என்று கும்கும்மின் குரல் திடிக்கிட வைத்தது.