நடுப் பகல் நேரம்; காசாம்பு கொண்டு வந்த கஞ்சிக் கலயத்தைக் காலியாக்கிவிட்டுக் களத்து மேட்டுக்கு வந்தான் கண்ணாயிரம்.
அங்கே அவன் கண்ட காட்சி......
எந்த வேலையைத் தன் மகன் செய்யக் கூடாது என்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுப் படிக்க வைத்தானோ, அந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்!
அதாவது, தந்தை விட்டுவிட்டு வந்த ஏரைப் பூட்டி, மாட்டை விரட்டி உழுது கொண்டிருந்தான் மகன்.
"ஏண்டா, முருகையா! இந்த வேலை செய்யவா உன்னை நான் படாத பாடு பட்டுப் படிக்க வைத்தேன்"
"செய்தால் என்னப்பா, உழவன் கைதானே உலகத்தின் கை?"
"அதற்காக என்னுடைய கைதான் பேனாவைத் தொட்டுக் கொடுப்பதோடு நின்று விட்டதே அது போதாதோ? போடா போ, போய் 'ரிஸல்ட்' வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு வா?"
"பார்த்துவிட்டேன் அப்பா, நான் பாஸ்!"
அவ்வளவுதான்; அவனைத் தூக்கித் தோளின் மேல் வைத்துக் கூத்தாடிக் கொண்டே, "காசாம்பு! ஏ, காசாம்பு!" என்று குதூலகத்துடன் குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.
"என்ன காசாம்பூவுக்கு?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினாள் அவள்.
"பையன் பாஸ் பண்ணிவிட்டானாம்!"
"அப்புறம் என்ன? வேலைக்கு மனு எழுதிப் போட்டு விட்டு, ‘எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா?' என்று இளித்துக் கொண்டே தபாற்காரனை வட்டமிடச் சொல்லுங்கள்!"
"போடி, போ! இவனை நான் எஸ். எஸ். எல். ஸி யோடு விட்டுவிடுவேனா, என்ன?"
"விடாமல் கட்டிக் கொண்டு அழப் போறீங்களா?"
"உனக்கு என்ன தெரியும்; எடுத்ததற்கெல்லாம் கட்டிக் கொண்டு அழத்தான் தெரியும்! போ, போ, போய் உன் தம்பியை இங்கே அனுப்பி விட்டு, நீ கொஞ்சம் கட்டுச் சோறு கட்டி வை!"