பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

விந்தன் கதைகள்

"எங்கே போவதற்காம்!"

"பட்டணத்துக்கு!"

"அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? அதைத் தான் எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்?"

"அழியாத செல்வம், அள்ள அள்ளக் குறையாத செல்வம்!"

"அந்த ஆள் ஏய்த்துப் பிழைக்கும் செல்வத்துக்காத் தான் ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுத் தொலைத்தீர்களே, அது போதாதா?"

"ஏழு ஏக்கர் என்னடி? இன்னும் இரண்டு ஏக்கர் பாக்கியிருக்கிறது பார், அதையும் அந்தப் பட்டணத்துச்சாமிக்கு விற்றுத்தான் இவனை நான் மேலே படிக்க வைக்கப் போகிறேன்!"

"கஞ்சிக்கு!"

"கவலைப்படாதே, இந்தக் கை இருக்கும்வரை காற்றாய்ப் பறக்க மாட்டோம்" என்று தன் கையை உயர்த்திக் காட்டினான் கண்ணாயிரம்.

அதற்கு மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை; சொன்னால்தான் அவன் கேட்கப் போகிறானா, என்ன?

மறுநாள் காலை.....

ரயிலை விட்டு இறங்கிய 'பட்டிக்காட்டுச் சாமிகள் இரண்டும் பட்ணத்துச்சாமி'யைத் தேடி அலைந்தன.

"அவருடைய பெயர் என்ன, அப்பா?" என்று கேட்டான், அலைத்தலைந்து அலுத்துப் போன முருகையன்.

"வக்கீல் வள்ளிநாயகம்"

"விலாசம்?"

"எழுபத்தைந்து, எல்லோரா நகர் என்று சொன்னார்!"

"இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா?" என்று எண்ணியவனாய் "எங்கே எல்லோரா நகர், எங்கே எல்லோரா நகர்?" என்று எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டே. எல்லோரா நகருக்குள் நுழைந்தான் முருகையன்.

அவனைத் தொடர்ந்து சென்ற கண்ணாயிரம் அங்கே வானளாவி நின்ற வண்ண மாளிகைகளைப் பார்த்ததும், "பார்த்தாயா, படித்தவர்கள் வசிக்கும் இடத்தை!" என்றான் பரவசத்துடன்.

"பார்த்தேன், பார்த்தேன்; பத்துக் குடிசைகள் போட்டுப் பத்துக் குடும்பங்கள் நடத்த வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பங்களா அல்லவா காட்டியிருக்கிறார்" என்றான் முருகையன் ஒரே வியப்புடன்.