பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தவர்கள்

537

கேட்ட கேள்விக்கு உடனே பதில் கிடைக்காமற் போகவே, "ஏன் விழிக்கிறீர்கள்? இரவு எங்கே, எப்படி கன்னம் வைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா, என்ன?" என்றான் வேலைக்காரன் பொறுமை இழந்து.

"அட., கடவுளே! இது கன்னமிடும் கை இல்லை ஐயா, அன்னமிடும் கை!" என்றான் கண்ணாயிரம் தன் கையைக் காட்டி.

"பட்டணத்திலே திருடனுக்கும் திருடாதவனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது!" என்றான் முருகையன்.

"திருட வரவில்லை யென்றால் வேறு எதற்குத்தான் வந்திருக்கிறீர்கள்? அதையாவது சீக்கரம் சொல்லித் தொலையுங்கள்; எனக்கு நேரமாகிறது!"

"கோபித்துக் கொள்ளாதீர்கள், ஐயா பட்டணத்திலே இவனைப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆசை; அதற்காகப் பச்சைமலையிலே இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தைப் 'பட்டணத்துச் சாமி'க்கு விற்றுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போலாமென்று வந்திருக்கிறேன்!"

"அதற்கு இவ்வளவு தூரம் வருவானேன் அங்கே யாரும் இல்லையா, அதை வாங்க!"

"எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; இருந்தாலும், அதை விற்கும்போது 'பட்டணத்துச் சாமி'க்கே விற்கிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டேன்; அதை மீறலாமா?"

"சரிதான், அரிச்சந்திரனுக்கு நேர் வாரிசு போலிருக்கிறது! அவர் இல்லை, போய் வாருங்கள்!"

"எங்கே போயிருக்கிறார்?"

"ஊட்டிக்கு!"

"எப்போது வருவார்?"

"நாளைக்கே வந்தாலும் வரலாம்; நாலு நாட்கள் கழித்து வந்தாலும் வரலாம்!"

கண்ணாயிரம் முருகையனின் முகத்தைப் பார்த்தான், முருகையன் கண்ணாயிரம் முகத்தைப் பார்த்தான். அவர்கள் இருவரையும் பார்த்த வேலைக்காரனோ "சரி, பார்த்துக் கொண்டிருங்கள்! நான் வருகிறேன்" என்று நாயை அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.