பதினோராம் அவதாரம்
553
புருஷனுக்கு என்னை விட்டா வேறே கதியில்லையே!" என்று கதறிப் பார்த்தாள் மாரியாயி.
சட்டம் அப்படிச் சொல்லவில்லையோ என்னவோ, "ஸைலன்ஸ்!" என்று இரைந்து, அங்கே நிலவியிருந்த நிசப்தத்தைக் கலைத்தான் 'கோர்ட்' சேவகன்!
★★★
காட்டில் ஒரு யானை நோய்வாய்ப்பட்டு இரை தேடித் தின்பதற்குச்சக்தியற்றுப் போனால், மற்ற யானைகள் அதற்கு இரங்கி இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்து அதைக் காப்பாற்றுமாம். அம்மாதிரியான கெட்ட வழக்கம் ஒன்றும் மனித வர்க்கத்தினிடம் கிடையாதல்லவா? ஆகவே தன் குடிசையில் நாதியற்றுக் கிடந்த முத்தையனை அந்த ஊரார் யாரும் கவனிக்கவில்லை. தன் மனைவி மாரியாயி ஒரு சுமை விறகைக் கொண்டு போய் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்ததற்காக, இரண்டு வாரச் சிறை வாசம் கிடைக்கப் பெற்றாள் என்பதும் அன்று மாலை வரை அவனுக்குத் தெரியவில்லை!
இந்நிலையில் அவன் அடிக்கடி 'மாரி மாரி' என்று அரற்றுவதும், கஞ்சிக் கலயத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகக் காலி செய்வதுமாகப் பொழுதைக் கழித்து வந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தக் குடிசை முழுவதும் இருள் கவிழ்ந்தது. விளக்கையாவது பொருத்தி வைக்கலாம் என்ற நோக்கத்துடன் அவன் அடுப்பங்கரையை நோக்கி நகர்ந்தான்.
இந்தச் சமயத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தி பரபரப்புடன் உள்ளே ஓடி வந்து, "முத்தையன் அண்ணே உன் பெண்சாதியைப் பட்டணத்திலே ஒரு போலீஸ்கார ஐயன் பிடிச்சிக் கிட்டான்!" என்று இரைந்தாள்.
அவள், மாரியாயியுடன் பட்டணத்திற்குக் காய்கறி விற்கச் சென்றவள்.
அவள் சொன்னதைக் கேட்டதும், "ஆ!" என்று அலறிய முத்தையா, அடுத்த நிமிஷம் மூர்ச்சையானான்!
சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ட சராசரங்களும் 'கிடுகிடு’ வென்று நடுங்குவது போன்ற ஒரு பேரோசை அவன் காதில் விழுந்தது.