பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சண்டையும் சமாதானமும்

557

"இங்கேயே எங்கேயாவது தங்கி இரவைக் கழித்து விட்டுப் பொழுது விடிந்ததும் தான் போக வேண்டும்"

"ரொம்ப அழகுதான்!" - இப்படிச் சொன்னேனோ இல்லையோ, பாழும் மழை 'சடசட'வென்று கொட்ட ஆரம்பித்து விட்டது, அதைப் பார்த்த இருளோ 'பளிச் பளிச்' என்று மின்னி எங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது.

எப்படி இருக்கும் எங்களுக்கு? - இருந்த குஷியெல்லாம் மறைந்து இருவரும் செய்வது இன்னதென்றறியாமல் விழித்தோம்.

"இப்படியே விழித்துக் கொண்டிருந்தால் மழையில் நனைந்து சாக வேண்டியது தான் - வா, போவோம்!" என்று சொல்லி, ரங்கா அருகிலிருந்த ஒரு சோலையை நோக்கிப் பறந்தது. நானும் அதைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அந்தச் சோலையிலிருந்த மரங்கள் ஒவ்வொன்றையும் அணுகி, ஏதாவது பொந்து இருக்கிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டே போனோம். அப்பாடா! எத்தனையோ மரங்களைப் பார்த்த பிறகு அடுத்தடுத்து இருந்த இரு பொந்துகள் இருந்தன. எங்களுடைய சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?" உடனே ஆளுக்கொரு பொந்தில் புகுந்து கொண்டோம்.

"இனி மழையும் இருளும் நம்மை என்ன செய்யும்?" என்று நாங்கள் கவலை யற்றிருந்தபோது, எங்கிருந்தோ இரண்டு கிளிகள் நாங்கள் இருந்த பொந்துகளைத் தேடி வந்து சேர்ந்தன. விசாரித்துப் பார்த்ததில், பொந்துகள் இரண்டும் அந்தக் கிளிகளினுடையவை என்று தெரிந்தது!

அப்புறம் பேச்சுக்கு என்ன இருக்கிறது? நான் பேசாமல் வெளியே வந்து அந்தப் பொந்துக்கு எதிர்த்தாற் போலிருந்த ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நிமிஷம் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே நான் இருந்த பொந்துக்குள் ஒரு கிளி சென்று விட்டது.

இன்னொரு கிளிக்குத்தான் ரங்கா இடம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுப்பது 'பயங்கொள்ளித்தனம்' என்று நினைத்து, அது 'பலப் பரீட்சை' செய்ய ஆரம்பித்தது.

“மரியாதையாக வெளியே வந்து விடுகிறாயா, இல்லையா?” என்று கேட்டது வெளியே இருந்த கிளி.