பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்தாண்டுத் திட்டம்

569


"சபாஷ், அப்படித்தான் இருக்கவேண்டும். ஆமாம், அத்தனை திட்டங்கள் வகுத்துமா உம்மை லாரியப்பராக்க அவரால் முடியவில்லை!"

"எப்படி முடியும்? முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது முந்நூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; மூத்த மகள் கல்யாணத்துக்கு நின்றாள்!"

"அப்புறம்?"

"அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!"

இதைக் கேட்டதும் முப்பத்தாறு முப்பத்தாறு என்ன தோன்றிற்றோ என்னமோ, "திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!" என்று தனக்குத் தானே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டது, மனச் சாந்திக்காக.

"ஓய், உம்மை யார் 'திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்' என்று சொல்லச் சொன்னது?" என்று எரிந்து விழுந்தது, 4545.

"என் அப்பன் திருநாமத்தைச் சொல்ல எனக்கு யார் சொல்ல வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டது. 3636.

"சரி, சொல்லும்! அவர் கிடக்கிறார்; நீர் மேலே சொல்லும் ஐயா?"

"இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; கல்யாணத்துக்கு நின்றவள் பிள்ளைப் பேறுக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்தாள்!"

"அப்புறம்?"

"அரோகரா, ஐந்தாண்டுத்திட்டம் அரோகரா!'"

"திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!"

"மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நூறு ரூபாய் சேர்ந்தது; எங்கிருந்தோ வந்த வெள்ளம் எஜமானின் குடிசையை அடித்துக் கொண்டு சென்றது!"

"ம், அப்புறம்!"

"அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!"

"திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்/"