பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்தாண்டுத் திட்டம்

571


"ஊரிலிருந்தா?"

"ஆமாம், சாப்பிடப் போகும் போது வந்து, 'என்ன மாமா? சௌக்கியமா?" என்று விசாரித்தால் அவர் என்ன செய்வார், பாவம்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு கணம் தவித்தார்; மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஏதோ இருக்கிறேன்! வா, உட்கார் சாப்பிடு! என்றார். 'நீங்களும் உட்காருங்கள்; சாப்பிடலாம்!" என்றான் அவன். "நான் இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீ சாப்பிடு!" என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியே வந்து விட்டார்!"

"ம், வயிறு காப்பாற்றப்படவில்லை யென்றாலும் கௌரவம் காப்பாற்றப்பட்டதாக்கும்?"

"அதன் பலன் என்னடாவென்றால், இன்று என்னை இழுக்கும்போது அவருடைய கால்கள் பின்னுகின்றன!"

"பின்னட்டும்; பின்னட்டும்!"

"இந்த நிலையில் தான் இன்று அவர் எழும்பூர் பாலத்தைக் கடக்க வேண்டுமாம்!"

"கடக்கட்டும்; கடக்கட்டும்!"

இந்தச் சமயத்தில் இறக்குமதியாளரான தன் எஜமானரை ஏற்றிக் கொண்டு அங்கே வந்த கார் நம்பர் 4545 "இன்னுமா நீ சரக்கை ஏற்றிக் கொண்டு கிளம்பவில்லை? மோசம், மோசம்! ரொம்ப ரொம்ப மோசம்! இப்படி வேலை செய்தால் உம்முடைய முதலாளி எப்படி உருப்படுவார்?" என்று கேட்டுக் கொண்டே ஓர் உறுமல் உறுமிவிட்டு நின்றது.

"அவர் உருப்பட்டால் உருப்படுகிறார்; உருப்படாவிட்டால் போகிறார், நீர் போய் உம்முடைய வேலையைப் பாரும்" என்றது கைவண்டி வெறுப்புடன்.

"ஆத்திரப்படாதே! மனிதன் எதனால் உயர்கிறான் தெரியுமா? உழைப்பினால் தான் உயர்கிறான்!"

"போதும்! எனக்குப் புளித்துப்போய் விட்டது, உம்முடைய உபதேசத்தைக் கேட்க கேட்க!"

"உம்மைப் போன்றவர்களுக்கு இந்த உலகத்தில் மிக மிக மலிவாகக் கிடைப்பது அது ஒன்று தானே, ஐயா? அதையும்