பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு ரூபாய்

583

ஏற்கெனவே திட்டமிட்டபடி, இருவரும் அந்தக் காக்கா ஓட்டல் இருந்த சந்து மூலைக்குத் திரும்பியது தான் தாமதம், தங்களை யாரோ கைதட்டி அழைப்பது போலிருக்கவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் பயந்ததற்கு ஏற்றாற் போல் அவர்களை நோக்கி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் அவசரம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்!

தம்மைக் கண்டதும் பேய் அறைந்தது போல் நின்ற அவர்களை நெருங்கி, "அந்தப்பழக்காரியிடமிருந்து என்ன வாங்கினீர்கள், காட்டுங்கள் கையை!" என்றார் அவர், அதிகாரத்துடன்.

அவ்வளவுதான்; 'நானில்லை, ஸார்!' என்றான் சின்னசாமி, அழாக்குறையாக.

அவனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே அவர் சொன்னது சொன்னபடி கையைக் காட்டினான் பெரியசாமி.

அவனை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டே அவன் கையிலிருந்த ரூபாய் இரண்டில் ஒன்றை எடுத்துத் தம் சட்டைப் பையில் போட்டுக் கொண்டே "பயப்படாதே, போ!" என்றார் அதிகாரி!

"நன்றி!" என்று சொல்லிக்கொண்டே பெரியசாமி நழுவ, "லஞ்சம் ஒழிந்ததோ இல்லையோ என்னைப் பிடிச்ச பயம் என்னை விட்டுப் போச்சுடா, அப்பா!" என்று பெருமூச்சு விட்டான் சின்னசாமி.