பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவன் ஏன் திருடவில்லை?

585

தனக்கு மட்டும் ஒரு போர்வை இருந்தால் அதை அவரிடம் கொடுத்து விடலாம். ஆனால் அம்மாவின் புடவைதானே, அவளுக்கும் புடவையாயிருந்து தனக்கும் போர்வையாக இருந்து தொலைகிறது?

இப்படி ஒரு நாள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது கடையின் சிப்பந்திகளில் ஒருவனான கணபதி அவனுடைய முதுகிலே ஒரு தட்டுத் தட்டி, "ஏண்டா, தம்பி! இன்னுமா நீ சாப்பாட்டுக்குப் போகலே?" என்றான் கனிவுடன்.

அப்போதுதான் சாப்பாட்டு நேரம் விட்டதென்பதையும், கடையில் தன்னையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் உணர்ந்த ஆறுமுகம் "இல்லை ஸார்!" என்றான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே.

"ஏண்டா?"

"அம்மா வேலை செய்யும் அய்யர் வீட்டிலே ராத்திரி ஒன்றும் மிச்சமாக வில்லையாம்!"

"அங்கே ராத்திரி சாப்பாடு மிச்சமானால் தான் உனக்கு இங்கே மத்தியானம் சாப்பாடா?"

"ஆமாம், ஸார். எனக்கு இங்கே மாசம் முப்பது ரூபாய் சம்பளம்: என் அம்மாவுக்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம்; இந்த நாற்பது ரூபாயில் ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் எங்கள் வீட்டில் அடுப்பு புகைகிறேன் என்கிறது, ஸார்!"

"ஐயோ, பாவம்! அதற்காக மத்தியானம் சும்மாவா இருப்பது? இந்தா ஒரு ரூவா போய்ச் சாப்பிடு!" என்று ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தான் கணபதி.

"என்ன ஆச்சரியம்! இப்படியும் ஒரு மனிதரா இந்தக் காலத்தில்? - நன்றி உணர்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஆறுமுகம் அடுத்தாற்போலிருந்த ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தான். ஒரு ரூபாய்க்குக் கிடைத்த அளவுச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு அவசரம் அவசரமாக கடைக்குத் திரும்பினான். அதற்குள் முதலாளி வந்து விடுவாரோ, என்னவோ என்ற அச்சத்தில்.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி முதலாளி வரவில்லை; அவருக்குப் பதிலாக கணபதியின் மகன் கல்யாணம் அங்கே வந்திருந்தான். அவனிடம் ஒரு போர்வையை எடுத்து அவசரம் அவசரமாக மடித்துக் கொடுத்துவிட்டு, "போ! போ சீக்கிரம் போ" என்றான் கணபதி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே.